ஹேப்பி நியூஸ்... குடையோடு நடமாடுங்க.. 5 நாட்களுக்கு மழை நீடிக்குமாம்!
தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது.
Recommended Video

சென்னை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இருப்பினும் ஒரு சில இடங்களில் வெப்பசலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அவ்வப்போது மழை பெய்து வந்தது.
ஆனாலும் பகல் நேரங்களில் கொளுத்திய வெயிலால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாயினர். இந்நிலையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

நள்ளிரவு முதல் மழை
தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் சிவகங்கை, சேலம், திருவள்ளூர், கரூர், கிருஷ்ணகிரி, பெரம்பலூர், உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதல் மழை பெய்து வருகிறது. புதுச்சேரியிலும் மழை வெளுத்து வருகிறது.

விடுமுறை அறிவிப்பு
கனமழை காரணமாக சேலம், கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

லட்ச தீவு பகுதியில்
இதனிடையே, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்ச தீவுப்பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி நிலவுகிறது.

கன மற்றும் மிக கனமழை
மேலும் தென் கிழக்கு வங்கக்கடலில் தமிழ்நாட்டின் கடலோரப்பகுதியில் வளிமண்டலத்தில் சுழற்சி உள்ளது. இந்த இரு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 5 நாட்கள் அனேக இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில் மிக கன மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரை திரும்ப அறிவுறுத்தல்
இதன்காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றுள்ள மீனவர்கள் உடனடியாக கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ரெட் அலர்ட் எச்சரிக்கை
இதேபோல் கேரளாவின் இடுக்கி, பாலக்காடு, திரிச்சூர் ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 7-ம் தேதி வரை 'ரெட் அலர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 6ம் தேதி வரை கேரளத்தின் பல்வேறு மாவட்டகளுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications