தமிழகம், புதுச்சேரியில் மேலும் 2 நாட்களுக்கு மழை வெளுக்குமாம்.. வானிலை மையம் ஜில் அறிவிப்பு!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மீண்டும் பருவமழை கொட்டித் தீர்க்க தொடங்கியுள்ளது. கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
மற்ற பகுதிகளில் மழை பெய்யாத என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் வெப்பசலனம் காரணமாக ஆங்காங்கே அவ்வப்போது திடீர் திடீரென மழை பெய்து வருகிறது.

இன்றும் பல இடங்களில் மழை
நேற்று சென்னை உட்பட பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் நல்ல மழை பெய்தது. இன்றும் வேலூர் மாவட்டம் ஆம்பூர் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

2 நாட்களுக்கு வெளுக்கும்
இந்நிலையில் வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.

சென்னையில் மாலை
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.

27% சதவீதம் அதிகம்
மேலும் தென்மேற்கு பருவமழை வலுபெற்றுள்ளதால் கோவை வால்பாறை, நீலகிரி, தேனியில் மழை பெய்து வருவதாக பாலச்சந்திரன் கூறினார். ஜூலை 1 முதல் ஜூலை 11 வரையிலான காலத்தில் இயல்பை விட 27 சதவீதம் அதிக மழை பெய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
தென் கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் பாலச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகளவாக சின்னக்கல்லாறில் 17 செ.மீ மழை பெய்துள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications