வெப்பச்சலனம் இருக்காம், இன்று சென்னையில் மழை பெய்யுமாம், சொல்கிறது வானிலை மையம்
சென்னை: சென்னையில் வெப்பச் சலனம் காரணமாக இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக சென்னையில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. தொடர்ந்து 6 நாட்களாக வெயில் 104 டிகிரிக்கும் அதிகமாக கொளுத்தியது.
இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், மெரினா, அடையாறு, தியாகராயநகர், பெரம்பூர், ராயபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நுங்கம்பாக்கத்தில் 3.7 மில்லி மீட்டர் மழை பதிவாகியது. மீனம்பாக்கத்தில் 3.3 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. மழை காரணமாக வெப்பம் தணிந்ததால் சென்னை நகர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர், "கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகமாக இருந்ததால் காற்றின் அடர்த்தி லேசானது. இதனால் கடல் காற்று வீசியது. அதன் காரணமாக மழை மேகம் உருவானது. இதையடுத்து வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்தது.
இன்றும் அதிக அளவில் கடல் காற்று வீச வாய்ப்பு உள்ளது. இன்று மாலையும் வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை முதல், மேற்கு பகுதியில் இருந்து தென்மேற்கு பருவகாற்று வீசும். இதனால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.