சென்னையை குளிர்விக்கும் சாரல்மழை… வெப்பச்சலனத்தால் மழை நீடிக்குமாம்!!
சென்னை: சென்னையின் பல பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது. மயிலாப்பூர், மந்தைவெளி, சிந்தாதிரிப் பேட்டை, கிண்டி மற்றும் நந்தனம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அக்னி நட்சத்திரம் முடிந்தும் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் கடுமையாகவே இருந்து வருகிறது. தலைநகர் சென்னையில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. சில நாட்களாகவே மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்னையின் பல இடங்களில் மழை பெய்து பூமியை குளிர்வித்து வருகிறது.
வெள்ளநீர் தேங்கியது
வெள்ளிக்கிழமை நள்ளிரவில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்து குளம்போல தேங்கி இருக்கிறது.
சென்னையில் சாரல் மழை
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. காலை முதலே சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
இடியுடன் மழை
வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று சில இடங்களில் மழை பெய்யும். சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உண்டு என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மழை அளவு
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர கணக்கீட்டின் படி, சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. செம்பரம்பாக்கத்தில் 5 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. ஏற்காடு, சென்னை தரமணி உள்ளிட்ட பகுதிகளில் 4 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.