சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும்... வட கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டும்!
சென்னை: இலங்கைக்கு அருகே வங்கக் கடலில் தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளதால் வட கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர். ரமணன் கூறியுள்ளார்.
இன்று காலை 8 மணி முதல் இதுவரை 35 சென்டி மீட்டர் அளவுக்கு தமிழகத்தில் மழை பெய்துள்ளதாகவும் ரமணன் கூறியுள்ளார்.
மழை நிலவரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் ரமணன், தென்மேற்கு வங்க கடலில் இலங்கைக்கு அருகே தீவிர காற்றழுத்த தாழ்வு உருவாகியுள்ளது. இது தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. மேற்கு வடமேற்காக நகர்ந்து தற்போது உள்ள இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். வடகடலோர மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காலை 8.30 மணி வரை தமிழகத்தில் சராசரியாக 35 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கடல் பகுதி மேலும் கடல் சீற்றமாக காணப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று ரமணன் தெரிவித்தார்.
மழை அளவு எப்படி இருக்கும்
இன்று முதல் 5 நாட்களுக்கு மழை இருக்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதில், இன்று முதல் 18ம் தேதி காலை 8 மணி வரை கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
15ம் தேதி காலை தொடங்கி 17ம் தேதி காலை எட்டரை மணி வரை கனத்த முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
17ம் தேதி காலை எட்டரை மணி முதல் 18ம் தேதி காலை எட்டரை மணி வரை ்பரவலாக கனத்த முதல் மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
18ம் தேதி காலை எட்டரை மணி முதல் 19ம் தேதி காலை எட்டரை மணி வரை பரவலாக மழை காணப்படும்.
19ம் தேதி காலை முதல் மழை அளவு குறைந்து விடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் பலத்த மழை
சென்னையில் இன்று காலை முதல் மிக பலத்த மழை தொடர்கிறது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் நகரமே ஈரக்காடாகி மூழ்கிப் போயுள்ளது.
விமான நிலையத்தில் பேய் மழை
சென்னை விமான நிலையப் பகுதிகளில் இன்று காலை முதல் விடாமல் மழை பெய்தபடி உள்ளது. அங்கு 3 மணி நேரத்தில் எட்டு செமீ மழை பதி்வானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.