நன்றாகப் பெய்த மழையை அப்படியேத் திருப்பி அனுப்பிட்டீங்களே பாஸ்!
சென்னை: இன்று காலை முதலே அப்படி மழை பெய்தது. பேய் மழை, கன மழை.. ஆனால் எந்த வேகத்தில் வந்ததோ அதே வேகத்தில் போய் விட்டது.... !
எல்லாம் எஸ்.ஆர். ரமணன் வந்து வானிலை அறிவிப்பை வாசிப்பதற்கு முன்பு வரை நன்றாகத்தான் இருந்தது. மழையைப் பார்க்கவே ரம்மியமாக இருந்தது. இப்போது சுத்தமாக மழை இல்லை.
தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை அருகே ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மறைந்து விட்டதாக ரமணன் கூறி விட்டார். எனவே இன்னும் சில நாட்களுக்கு மழை அளவு குறைவாகவே இருக்கும்.

வட கிழக்குப் பருவ மழை
தமிழகத்தில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த 26ம் தேதி உருவாகி இருந்தது. இதன் காரணமாக தமிழ் நாட்டின் வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் நேற்று மழை பெய்தது.

சென்னையில் காலையில் செம மழை
சென்னையிலும், அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 10 மணியளவில் இடியுடன் கனமழை பெய்தது.

ஊற்றி எடுத்தது
நகரில் எழும்பூர், சென்ட்ரல், கோயம்பேடு, அண்ணாநகர், அம்பத்தூர், ஆவடி, பூந்தமல்லி, திருவொற்றியூர், தண்டையார் பேட்டை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், மயிலாப்பூர், அடையாறு, திருவான்மியூர், வேளச்சேரி, ஆலந்தூர், ஆதம்பாக்கம் மற்றும் புறநகர்Kளில் பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், மேடவாக்கம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, சோழிங்கநல்லூர், துரைப்பாக்கம் உள்பட பல பகுதிகளில் கனமழை கொட்டியது. ரோடுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

எல்லாம் போச்சு
ஆனால் தற்போது மழை சுத்தமாக நின்று போய் விட்டது. இதுகுறித்து ரமணன் கூறுகையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு இன்று மறைந்து விட்டது. தற்போது வங்கக்கடலில் ஒரு மேலடுக்கு சுழற்சி நீடிப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்து வருவதாக கூறினார் அவர்.

ஒரு சில இடங்களில்
மேலும் ரமணன் கூறுகையில், வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் சில பகுதிகளில் கன மழை பெய்யும் என்றார். சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுமாம். நகரின் ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்யுமாம்.

நமக்கு யூஸ் ஆகாத புயல்!
இதற்கிடையே, அரபிக் கடலில் ஒரு புயல் உருவாகியுள்ளது. இதற்கு ஜபாலா என்று பெயர் வைத்துள்ளனர். ஆனால் இந்தப் புயலால் நமக்கு ஒரு பிரயோஜனமும் கிடையாது. இது தற்போது ஓமன் - ஏமன் நாட்டை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த புயலால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.












Click it and Unblock the Notifications