சென்னை மற்றும் புற நகரங்களில் இடியுடன் கனமழை...வடபழனியில் போக்குவரத்து நெரிசல்
சென்னை: சென்னை மற்றும் அதன் புற நகர் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. வடபழனி 100 அடி சாலை, சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் சாலைகளில் தேங்கியுள்ளதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
சென்னை நகரின் சில பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்த நிலையில், தி-நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம் உள்ளிட்ட இடங்களில் இடியுடன் மழை பெய்து வருகிறது.
அதேபோல் கே.கே. நகர், அண்ணாநகர், திருமங்கலம், கொரட்டூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை கொட்டி வருகிறது. கனமழையின் காரணமாக கோயம்பேடு முதல் வடபழனி வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு ஆகிய இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து சென்ற வண்ணம் உள்ளன.
அதேபோல், சென்னை புறநகர் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அம்பத்துார், ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், மாதவரம், மணலி, போரூர், திருவேற்காடு, மணலி, மாத்தூர், போரூர், பாடி, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.