காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு - வானிலை மையம்
குமரிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியுள்ளார்.
சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். தண்ணீர் பிரச்சினை தீரும் என்றாலும் பல பகுதிகளில் பருவம் தவறி பெய்த மழையால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி, நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது. வறட்சி ஏற்பட்டு சம்பா பயிர்கள் கருகிய நிலையில், ஒரு சில இடங்களில் அறுவடைக்கு தயாரான பயிர்களும் நீரில் மூழ்கியுள்ளன. உளுந்து பயிர் சாகுபடியும் மழையினால் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

நானை மாவட்டம் மயிலாடுதுறை அருகே குறைந்த அளவு சாகுபடி செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராகி இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி முளை விடத் தொடங்கியுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை தொடர்ந்து நீடிக்கும் பட்சத்தில் தானிய பயிர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது. பருவம் தவறிய மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், மேல்மலை, கீழ்மலை அதன் சுற்றுவட்டார கிராமங்களில் சாரல் மழை பெய்தது. இதனால் குளுகுளு சீதோஸ்ணம் நிலவியது.
இதேபோல திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் உள்ளிட்ட பகுதிகள் கனமழை பெய்துள்ளது. இதனால் தண்ணீர் பிரச்சினை தீரும் என்று பொதுமக்கள் நம்பிக்கையடைந்துள்ளனர்.
இதனிடையே தென் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும்,நாளை முதல் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வங்க கடலில் மன்னார் வளைகுடா அருகில் நேற்று நிலை கொண்டிருந்த குறைந்த காற்று அழுத்த தாழ்வு நிலை, இன்று குமரி கடல் அருகே நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென் மாவட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களிலும் வட தமிழகம் மற்றும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யும் என்றார்.
கடந்த, 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக பாம்பனில் 13 செ.மீ மழை பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications