காலணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. அமைச்சர் பதவி கொடுத்த 'அம்மா ' கண்கலங்கிய அமைச்சர் !!
சென்னை: தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள இளம் வயது அமைச்சரான ராஜலட்சுமி, தனது பேச்சினால் முதல்வர் ஜெயலலிதாவையும் உருகவைத்த சம்பவம் சட்டசபையில் நிகழ்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி. முதல்வர் ஜெயலலிதாவால் அதிமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட இளம்பெண்கள் பாசறையில் இணைந்தார் ராஜலட்சுமி. கடந்த 2004 ஆம் ஆண்டில், இளம்பெண்கள் பாசறையின் சங்கரன்கோவில் 18-வது வார்டு செயலாளரானார்.

சங்கரன்கோவில் பேரவை உறுப்பினராக இருந்த கருப்பசாமி மறைந்ததைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் நகராட்சி தலைவியாக இருந்த முத்துச்செல்வி எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதையடுத்து 2014ல் நடைபெற்ற சங்கரன்கோவில் நகராட்சி தலைவர் பதவிக்கான இடைத் தேர்தலில் கடைசி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து, போட்டியின்றி தேர்வு பெற்றார் ராஜலட்சுமி. இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் ராஜலட்சுமி.
இதனிடையே அமைச்சரவை பட்டியலில் எப்படியும் இணைந்து விடவேண்டும் என்ற வேட்கை புதிதாக சட்டமன்றத்திற்குள் நுழைந்த அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் முதல், பழைய எம்.எல்.ஏக்கள் வரை அனைவருக்கும் இருந்தது. ஆனால் அந்த வாய்ப்பு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. ஜெயலலிதாவின் குட்புக்கில் இடம்பெற்றிருந்த ராஜலட்சுமிக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. ராஜலட்சுமியின் அடக்கத்திற்கும் விசுவாசத்திற்கும் பரிசாக அவருக்கு அமைச்சர் பதவியும் வழங்கினார் ஜெயலலிதா.
இந்த நிலையில் சட்டசபையில் துறை ரீதியான மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. அந்தந்த துறை சார்ந்த அமைச்சர்கள் விவாதத்தில் பங்கெடுத்து பதில் அளித்து வருகிறார்கள். அதிலும் துறையை பற்றியோ, தங்கள் தொகுதியை பற்றியோ பேசுவதை விட முதல்வரை எப்படி குளிர்விக்கலாம் என்று பேசுவதில் தான் அமைச்சர்கள் ஆர்வம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.
அந்த வகையில் அமைச்சர் ராஜலெட்சுமியோ ஒரு படி மேலே போய் பேசியுள்ளதுதான் ஹைலைட், அவரது பேச்சை அவையில் இருந்து கேட்ட ஜெயலிலதாவையும் உருக வைத்து ஸ்கோர் செய்தார். ஆதிதிராவிட துறையின் மானியக்கோரிக்கைக்கு பதில் அளித்து பேச எழுந்த அமைச்சர் ராஜலெட்சுமி "காலனியில் பிறந்த என்னை.. காலணி இல்லாமலே வளர்ந்த எனக்கு.. இன்று என்வீட்டிற்கே இரண்டு காவலர்களை காவலுக்கு நிறுத்தியவர்.. எங்கள் புரட்சி தலைவி அம்மா" என்று சொல்லி தழுதழுத்தார்.
இவரின் இந்த பேச்சை கேட்டு முதல்வர் ராஜலெட்சுமியை உருக்கமாக பார்க்க, தொடர்ந்து பேசமுடியாமல், தழுதழுத்த குரலில் ராஜலெட்சுமி "காலனியிலிருந்து வந்த என்னை இந்த துறைக்கு அமைச்சராக்கி, இன்று ஆதிதிராவிட துறையை 'ஜோதி' திராவிட துறையாக மாற்றி காட்டியவர்" என்று பேச நிசப்தம் நீங்கி சபையில் மேஜை தட்டும் எழுந்தது. அமைச்சர்கள் அனைவரும் இதை சென்டிமென்டாக பாரக்க... எம்.எல்.ஏக்களின் முகத்திலோ. நமக்கு எப்ப வாய்ப்பு கிடைக்கும் இப்படியெல்லாம் பேசி அம்மாவை குளிர்விப்பதற்கு என்ற ஏக்கம் தெரிந்தது.












Click it and Unblock the Notifications