ராஜராஜ சோழன் சதய விழாவிற்கு ஓஎன்ஜிசியிடம் நிதி பெறுவதா?..விவசாயிகள் கொதிப்பு
மாமன்னர் ராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா கொண்டாட்டத்திற்கு விவசாயத்தை அழிக்க வந்த ஓஎன்ஜிசியிடம் நிதி வாங்குவதா என்று அந்தப் பகுதி விவசாயிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
தஞ்சாவூர் : மாமன்னர் ராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா கொண்டாட்டத்திற்கு விவசாயத்தை அழிக்க வந்த ஓஎன்ஜிசியிடம் நிதி வாங்கியது விவசாயிகளுக்கு அரசு செய்யும் துரோகம் என்று அந்தப் பகுதி விவசாயிகள் கொந்தளித்துள்ளனர்.
உலகப் புகழ் பெற்ற ஆன்மிக தலமான, தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய இராஜராஜசோழனின் பிறந்த நாள், ஒவ்வொரு ஆண்டும் அவருடைய நட்சத்திர நாளான சதய தினத்தில், சதய விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான, இராஜராஜ சோழனின் 1032-வது சதயவிழா நேற்றும் இன்றும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சை பெரிய கோயில் வளாகத்தில் 2 நாட்களாக நடைபெறும் இந்த விழழவை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜராஜசோழன் சதயவிழாவையொட்டி தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
வரலாற்று சிறப்புமிக்க ராஜராஜ சோழனின் சிலையை கோவிலுக்குள் வைக்க வேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் கோவிலுக்கு வெளியில் வைக்கப்பட்டுள்ள அவரின் சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சதயவிழா செலவுகளுக்காக தமிழக அரசு ஓஎன்ஜிசியிடம் ரூ. 7 லட்சம் பெற்றுள்ளதாக அந்தப் பகுதி விவசாயிகள் தெரிவிக்கின்றனர். தஞ்சை மண்டலத்தில் எண்ணெய்க் குழாய் பதித்து விவசாயத்தை அழிக்கும் ஓஎன்ஜிசியிடம் நிதி பெற்று ராஜராஜ சோழன் சதயவிழா கொண்டாடுவது அரசு விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்று விவசாயிகள் குமுறுகின்றனர்.
மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு செவி மடுக்காத தமிழக அரசு ஓஎன்ஜிசியிடம் நிதி பெற்று ராஜராஜசோழன் சதயவிழா நடத்துவது எந்த வகையில் நியாயம் என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.