ஏ.கே. போஸ் வேட்புமனுவில் ஜெ. கைரேகை... ஹைகோர்ட்டில் ராஜேஷ் லக்கானி விளக்கம்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கில் மாநில தேர்தல் ஆணையர் ராஜேஷ் லக்கானி சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் உட்பட பலர் போட்டியிட்டனர். இதில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
தேர்தலில் முறைகேடுகள் செய்ததால் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
ஏ. கே. போஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஜெயலலிதா உடல் நலமில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கை ரேகை பதிவு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. டாக்டர் பி.சரவணன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் குறுக்கு விசாரணை நடத்தினார். அப்போது டாக்டர் சரவணன் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதா உடல் நலம்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 22ஆம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது தமிழக சுகாதாரத் துறை செயலாளர்தான் டாக்டர் குழுவை நியமித்து ஜெயலலிதாவுக்கான சிகிச்சையில் முக்கிய பங்கு வகித்தார்.

ஜெயலலிதா பெருவிரல் ரேகை
திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலின்போது அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க அதற்கான படிவத்தில் ஜெயலலிதாவின் ரேகை மட்டும் வைக்கப்பட்டு இருந்தது. அதில் அவரது கையெழுத்து இல்லை.
அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க, சென்னை மருத்துவக் கல்லூரி டாக்டர் பாலாஜியை நியமித்து தேர்தல் படிவத்தில் ஜெயலலிதாவின் இடதுகை பெருவிரல் ரேகையை பெற வைத்ததும் சுகாதாரத் துறைச் செயலாளர்தான்.

சுயநினைவோடு இருந்தாரா?
இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க கைரேகை வைக்கும்போது தீவிர மருத்துவ சிகிச்சையில் இருந்த ஜெயலலிதா சுயநினைவோடுதான் இருந்தாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதுதொடர்பாக ஏ.கே.போஸ் எம்எல்ஏ, தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் உள்ளிட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது.

கூடுதல் மனு
எனவே, இந்த வழக்கில் ஏ.கே.போஸ் எம்எல்ஏ பதிலளிக்கவும், தமிழக சுகாதாரத் துறை செயலாளர் 17 வகையான மருத்துவ ஆவணங்களுடன் ஆஜராகவும் உத்தரவிட வேண்டும் என்று கூடுதல் மனுவில் கோரியிருந்தார்.

சுகாதாரத்துறை செயலாளர்
இதுதொடர்பான அனைத்து ஆவணங்களுடன், மாநில சுகாதாரத்துறை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட வேண்டும். ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட சிகிச்சை விவரங்கள், லண்டன் டாக்டர் ரிச்சர்ட் பேல் மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் அளித்த சிகிச்சைகள் உள்ளிட்ட விவரங்களையும் சுகாதாரத்துறை செயலாளர் ஆஜராகி சாட்சி அளிக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

நோட்டீஸ் அனுப்ப உத்தரவு
இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பாக கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, இந்த வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

நேரில் ஆஜராகி விளக்கம்
B-படிவ அங்கீகாரம் குறித்து, உரிய ஆவணங்களுடன், தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார். வழக்கு விசாரணை வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். இந்த நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதா கைரேகை சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications