ரஜினி அரசியல்... கட்சிகளிலிருந்து திரும்பும் ரசிகர்கள்... களைகட்டும் மன்றங்கள்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்பது தெரிந்ததிலிருந்து அவரது ரசிகர்கள் பெரும் பரபரப்பில் இருக்கிறார்கள்.
ரஜினி அரசியலுக்கு வரவேண்டும்... தமிழக முதல்வராகி நல்லது செய்ய வேண்டும் என கடந்த கால் நூற்றாண்டாக ரசிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள ரஜினிகாந்த், அவ்வப்போது அரசியல் பேசி வந்தார். ஆனால் தன் அரசியல் பிரவேசம் ஆண்டவன் கையில் இருப்பதாகக் கூறி வந்தார்.
களப்பணியில்
ஆனால், சமீபத்தில் ரசிகர்களுடனான சந்திப்பு நிகழ்ச்சியின்போது, அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட உறுதிப்படுத்திவிட்டார். இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அவர் அரசியலுக்கு வருவது குறித்து பலர் பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ரசிகர்களோ களப்பணிகளில் உற்சாகமாக ஈடுபடத் தொடங்கி உள்ளனர்.
மாற்றுக் கட்சிகளிலிருந்து
ரஜினியின் ரசிகர்கள் ஒரு கட்சியில் மட்டுமல்ல.. பல கட்சிகளில் உள்ளனர். ஏன்... பாமகவிலேயே ஏராளமான ரஜினி ரசிகர்கள் உள்ளனர். இந்த ரசிகர்கள் அந்தந்த கட்சிகளை விட்டு, மீண்டும் முழுமையாக ரஜினி மன்றங்களுக்கே திரும்பி வருகின்றனர்.
ரஜினி சொன்னது...
முன்பு ரஜினி ஒருமுறை, "எனது ரசிகர்கள் பல்வேறு கட்சிகளில் உள்ளனர். ஒருவேளை நான் கட்சி ஆரம்பித்தால், அவர்களை திரும்ப அழைத்துக் கொள்வேன்," என்று கூறியிருந்தார். அவர் வார்த்தைக்கேற்ப இப்போது ரசிகர்கள் கட்சிகளிலிருந்து திரும்பி வருவதாக, ரசிகர் மன்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கட்சி அறிவிப்பு எப்போது?
வரும் ஜூலை மாதம் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறார். அம்மாத இறுதிக்குள் புதிய கட்சியை அறிவித்துவிடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. கட்சியின் பெயர், கொடி குறித்து ஏற்கெனவே ரஜினி முடிவு செய்து வைத்துவிட்டதாகச் சொல்கிறார்கள்.