ரஜினியும், கமலும் விஷாலை ஆதரித்தாலும் நான் கவலைப்பட போவதில்லை- சரத்குமார்
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலில் ரஜினியும், கமலும் விஷாலை ஆதரித்தாலும் நான் கவலைப்பட போவதில்லை என்று மதுரையில் நடிகர் சரத்குமார் கூறியிருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் நெருங்கி வந்து கொண்டிருக்கும் நிலையில் தேர்தலில் வெற்றியைப் பெற சரத்குமார் அணியும், விஷால் அணியும் கடுமையான போட்டியில் இறங்கியுள்ளனர்.
சரத்குமார் அணி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை விஷால் அணியினர் சுமத்த பதிலுக்கு சரத்குமார் அணியினர் விஷால் அணி மீது பணம் கொடுத்து வாக்குகளை வாங்குவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் இருக்கும் நாடக நடிகர்களை சந்திப்பதற்காக சரத்குமார் அணியினர் மூன்றாவது தடவையாக சமீபத்தில் மதுரைக்கு சென்றனர்.
நாடக நடிகர்கள் முன்னிலையில் நடிகர் சரத்குமார் பேசும்போது ''எங்கள் மேல் தொடர்ந்து ஊழல் புகார் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நானும் இதற்கு பதில் சொல்லிக்கொண்டே இருக்கிறேன்.
ஆனால், பணம் கைமாறிவிட்டது என்று எஸ்.வி.சேகரும், விஷாலும் ஆதாரமில்லாமல் சொல்லி வருகிறார்கள். அவர்கள் மீது பத்து கோடி ரூபாய்க்கு மான நஷ்ட வழக்கு போட்டுள்ளேன்.
ரஜினி, கமல் அவர்களை ஆதரிப்பது பற்றி எனக்குக் கவலையில்லை, அவர்களுக்கு ஜனநாயகப்படி உரிமை உண்டு. இந்த சரத்குமார் நடிகர் சங்கத்துக்கு ஒன்றுமே பண்ணவில்லை என்று சொல்லும்போது மனது வலிக்கிறது.
நாளை தேர்தல் நடந்து முடிந்தாலும் இனி ஒற்றுமையாக முடியாது. என்னை பற்றி அவதுறாக பேசியவர்கள் முகத்தில் என்னால் முழிக்க முடியாது. இவ்வளவு நாள் ஷாப்டாக இருந்துவிட்டேன். இனி இருக்க மாட்டேன். நான் யாரென்பதை காண்பிப்பேன்'' என்றார்.
நடிகர் சரத்குமாருடன், ராதாரவி, ராதிகா, ராம்கி, கே.என்.காளை மற்றும் "பசி" சத்யா ஆகியோரும் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.
சரத்குமாரின் இந்தப் பேச்சு திரையுலகில் சற்றே அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.












Click it and Unblock the Notifications