தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம்- ரஜினி
தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று ரஜினி தெரிவித்தார்.
தூத்துக்குடி: தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம் என்று தூத்துக்குடியில் வெளியான வீடியோ பதிவில் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
தான் அரசியலுக்கு வருவதாகவும் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்றும் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி கூறியிருந்தார். மேலும் வரும் சட்டசபை தேர்தலில் கட்சி தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை அவர் ஏற்படுத்தியுள்ளார். இந்த அமைப்புக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
தூத்துக்குடியில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கூட்டத்தில் நேற்று நடைபெற்றது. அதில் வெளியிடப்பட்ட வீடியோ பதிவில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: அரசியல் என்பது பொதுநலம்,சுயநலமல்ல, மக்களுக்கு நல்லது செய்வது மட்டுமே நமது நோக்கம். ஆண்டவன் அளித்துள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொள்ள வேண்டும்.
ஒற்றுமையாக இருந்தால் எதையும் சாதிக்கலாம், தமிழகத்தில் பெரிய மாற்றத்தை கொண்டு வருவோம். குடும்பத்தை விட்டு அரசியலுக்கு வர வேண்டும் என சொல்லவில்லை அவர்களையும் கவனிக்க வேண்டும்.