எல்லாரையும் சந்திக்கிறார்... அவர்களிடம் அப்படி என்னதான் பேசுகிறார் ரஜினி?
கடந்த 2 மாத காலமாக பரபரப்பிலேயே இருக்கிறது போயஸ் கார்டன். இது ஜெயலலிதா அல்லது அதிமுகவால் ஏற்பட்ட பரபரப்பு அல்ல... ரஜினிகாந்த் தன் அரசியல் வருகையை அறிவித்த பின் ஏற்பட்டுள்ள பரபரப்பு.
தினசரி யாராவது ஒரு தலைவர், நடிகர், நடிகை, டிவி விவாதத்தில் பங்கேற்பவர் அல்லது பத்திரிகையாளர் அவரைச் சந்திப்பதும், படமெடுத்துக் கொள்வதுமாய் இருக்கிறார்கள். சந்திப்புகள் அனைத்தும் ராகவேந்திரா மண்டபத்தில் நடப்பதில்லை. வீட்டில்தான்.

விமர்சிப்பவர்களுக்கும் அப்பாயின்ட்மென்ட்
ரஜினியை விமர்சிப்பவர்களுக்கும் கூட சந்திக்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. சந்தித்து விட்டு வெளியில் வந்ததும், ரஜினியைப் பாராட்டிவிட்டு நிச்சயம் அவர் அரசியலுக்கு வருவார் என்று கூறிவிட்டுப் போகிறார்கள்.
சரி.. இவர்களிடம் அப்படி என்னதான் பேசுகிறார் ரஜினிகாந்த்?

ஒத்தடமாக இருக்கும்
சந்தித்துப் பேசிய சிலரிடம் கேட்டோம்.
"ரஜினி சார் உண்மையிலேயே அரசியலுக்கு வருவாரா? இந்த கேள்வியுடன்தான் அவரைச் சந்தித்தேன். ஆனால் அவரிடம் பேசியதிலிருந்து, தனிக் கட்சி தொடங்கி ஆட்சியைப் பிடிக்கும் எண்ணம் அவருக்கு இருப்பது புரிந்தது. முடிந்தவரை மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணமே அவரிடம் மேலோங்கி நிற்கிறது. அப்படி ஒரு எண்ணத்தோடு அரசியலில் நுழைந்த யாரையும் சமீபத்தில் நான் பார்த்ததில்லை. ரஜினி அரசியல் தமிழகம் இதுவரை பட்ட ஊமைக் காயங்களுக்கு ஒத்தடமாக இருக்கும்.
பெரும்பாலும், அவர் என்னைப் போன்றவர்களை பேசச் சொல்லி கேட்கிறார். நாட்டு நிலைமையை ஒவ்வொருவர் பார்வையிலும் கேட்டறிந்து, தன் பார்வையில் தீர்வு வைத்திருப்பார் என்று நினைக்கிறேன்," என்கிறார் பெயரைக் குறிப்பிட விரும்பாத ஒரு பிரமுகர்.

கஸ்தூரி
"நான் அவரைச் சந்தித்தபோது, எனக்குள் இருந்த ஆதங்கத்தைச் சொன்னேன். அவர் அரசியலுக்கு முன்பே வராமல் போய்விட்டாரே என்பதைச் சொன்னேன். சிரித்தபடி கேட்டுக் கொண்டார். அவருடைய நோக்கம் பற்றியெல்லாம் கேட்டு தெரிந்து கொண்டேன். அவரது அரசியல் பிரவேசம் உறுதி. எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்கிறேன்," என்கிறார் சமீபத்தில் ரஜினியைச் சந்தித்த நடிகை கஸ்தூரி.

தமிழருவி மணியன்
ஒன்றரை மணி நேரம் ரஜினியுடன் பேசிய தமிழருவி மணியனிடம்தான் அதிக அளவு தனது அரசியல் பார்வை, தனது பாதை, நோக்கங்கள், திட்டங்களைப் பற்றிப் பேசியிருக்கிறார் ரஜினி.
அதுபற்றி தமிழருவி மணியனிடம் பேசியபோது, "நான் எதையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை. ரஜினிகாந்த் மிக நுட்பமாக ஒவ்வொன்றையும் உள்வாங்கிக் கொள்கிறார். அது பற்றிய தனது கருத்து எதையும் சொல்வதில்லை. முரண்பாடு இருந்தால் கூட அமைதியாகக் கடந்து போகிறார். அளவோடு பேசுகிறார். அவரது அரசியல் தமிழகத்துக்கு ஒரு மாறுதலாக அமையும்," என்கிறார்.

நல்லது செய்ய வேண்டும்
"நல்லவர்களுடன் கைகோர்க்க வேண்டும்.. அவர்கள் துணையுடன் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதுதான் ரஜினியின் அரசியல். அதற்காகத்தான் இந்த சந்திப்புகள் எல்லாம். விரைவில் நல்ல அறிவிப்பு காத்திருக்கிறது," என்பதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வந்தவர்கள் சொல்லும் முத்தாய்ப்பு பதிலாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications