மக்கள் வேண்டுமென்றேவா போடுகிறார்கள்? ரஜினி யாரை சமூக விரோதிகள் என்கிறார்? முத்தரசன் விளாசல்
ரஜினியின் கருத்து ஏற்புடையது அல்ல என முத்தரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது என்றும் சமூக விரோதிகள் என்று கூறிய ரஜினியின் கருத்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் உள்ளதாகவும் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய பின் ரஜினி சென்னை திரும்பினார். அப்போது சென்னை திரும்பி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியபோது, ஜல்லிக்கட்டு போராட்டத்தின் கடைசி நாளில் சமூக விரோதிகள் நுழைந்து கெடுத்தது போன்று தூத்துக்குடி போராட்டத்திலும் சமூக விரோதிகள் நுழைந்துவிட்டதாக கூறினார். மேலும் போராட்டம் போராட்டம் என்று சொல்லி தமிழகத்தை சுடுகாடு ஆக்கிவிட வேண்டாம் என்றும் செய்தியாளர்கள் முன்னிலையில் ஆவேசமாக பேசினார்.
நடிகர் ரஜினியின் இந்த பேச்சு குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதன்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்மாநில செயலாளர் முத்தரசன் தனியார் செய்தி சேனலுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் போராடினால் தமிழகம் ஏன் சுடுகாடாகிறது? மக்கள் வேண்டுமென்றேவா போடுகிறார்கள்? 99 நாட்கள் அமைதியாகத்தானே மக்கள் போராடினார்கள். 100-வது நாள் அன்றுதான் கலவரம் நடைபெற்றது.
ஆனால் ரஜினி யாரை சமூக விரோதிகள் என்கிறார் என புரியவில்லை. அதுவும் அதையே திரும்ப திரும்ப கூறுகிறார். இப்படி திரும்ப திரும்ப சமூக விரோதிகள் என்று சொல்வதால், தாக்குதலுக்கு காரணமானவர்களை ரஜினி காப்பாற்ற முயல்கிறாரா? ரஜினியின் கருத்து ஏற்புடையது அல்ல. நிராகரிக்க கூடியது. மக்கள் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தக்கூடிய கருத்தாகும். ரஜினி போன்றவர்களுக்கு போராட்டம் என்றாலே பிடிக்காது.
இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார்.