பாஜகவுக்கு ரஜினி ஆதரவு தர வேண்டும்: தமிழிசை சவுந்திரராஜன்
வேலூர்: லோக்சபா தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி பிரதமராகவும் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்திரராஜன் கேட்டுக் கொண்டுள்ளார்.
வேலூர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா செயல்வீரர்கள் கூட்டம் காவேரிப்பாக்கத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பின்னர் தமிழிசை சவுந்திரராஜன் நிருபர்களிடம் பேசியதாவது:
இளந்தாமரை மாநாடு
''திருச்சியில் வரும் 26ம் தேதி இளந்தாமரை மாநாடு நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்திலிருந்து திரளானோர் பங்கேற்க வேண்டும்.
பல உத்திகளை செய்கிறார் மோடி
வரும் லோக்சபா தேர்தலில், பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும், பிரதமர் வேட்பாளரான மோடி தேர்தலில் வெற்றி பெற பல்வேறு உத்திகளைச் செய்து வருகிறார்.
மீனவர்களைக் காப்போம்
பா.ஜ.க.ஆட்சிக்கு வந்தால் தமிழக மீனவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை 31 முறை உயர்த்தப்பட்டுள்ளது.
நதிகள் இணைப்புக்கு ரஜினி ஆதரவு தந்தாரே...
நதிகளை இணைக்க வேண்டும் என வாஜ்பாய் பிரதமராக இருந்த போது அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு நடிகர் ரஜினி முதலில் ஆதரவு அளித்தார்.
அதேபோல மோடியையும் ஆதரிக்கனும்
எனவே, மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. ஆட்சி அமைக்கவும், மோடி பிரதமராகவும் ரஜினி ஆதரவு அளிக்க வேண்டும்''என்று தெரிவித்தார்.