ரஜினியை இயக்கும் அசல் இயக்குநர்கள் யார்?... சிஸ்டம் சரியில்லை -2
- மணா
18.3.1987 தேதியிட்ட ஜூனியர் விகடன் வார இதழுக்குத் தந்த அன்றைய பேட்டியின் தலைப்பே என்ன தெரியுமா?
''அரசியல்வாதிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள்''
அந்தப் பேட்டியில் ரஜினி சொல்லியிருக்கிறார்.
''நம்மை ஆளப்போகிறவர்களுடைய தகுதியைப் பற்றி நாம் கவலைப்படுவதே இல்லை. அதனால் தான் பதவிக்கு வருகிறவர்கள் நம் வாழ்க்கைத் தரத்தைப் பற்றிக் கவலைப்படுவதில்லை''
அதே ஆண்டில் 7.1.1987 தேதியிட்ட குமுதம் வார இதழுக்கு அளித்த பேட்டியில் ரஜினியிடம் அவருக்குப் பிடித்த பழமொழி என்ன என்று கேட்கிறார்கள்.
அதற்கு அவர் அளித்த பதில் :
'' காற்றுள்ள போதே தூற்றிக் கொள்''
1996 ல் தி.மு.க.வும், மூப்பனார் தலைமையிலான தமிழ் மாநிலக் காங்கிரஸூம் இணைவதற்குப் பாடுபட்டதைப் பற்றி அண்மையில் சென்னையில் நடந்த ரசிகர்கள் சந்திப்பின்போது '' அது ஒரு விபத்து'' என்றார் ரஜினி.
இப்படி 96லிலும், 87 லிலும் ரஜினி பேசிய பேச்சுகளை எல்லாம் கவனத்தில் வைத்து, அந்தக் குறிப்புகளை எல்லாம் தேடி எடுத்து எழுதுவது அவருடைய ரசிகர்களுக்கே விசித்திரமாகத் தெரியலாம்.
சினிமாவில் ஃப்ளாஷ்பேக்கை ரசிக்கும் ரஜினிக்கு தன்னுடைய ஃப்ளாஷ்பேக்கை எடுத்துச் சொல்வதை ரசிக்காமல் கூட இருக்கலாம்.
ஆனால் - நடிகராக மட்டுமில்லாமல், அரசியல் என்கிற பொதுத்தளத்திற்கு வரும்போது பல விமர்சனங்களைத் தாங்கத்தான் வேண்டும்- ' நீங்கள் யார்?' என்கிற யதார்த்தமான கேள்விகள் உட்பட.
காவல்துறைக்காகத் தீவிரமாகப் பேசும் ரஜினி அதே காவல்துறையில் மன அழுத்தம் தாங்காமல் தற்கொலை செய்து கொள்ளும் கடைநிலைக் காவலர்களைப் பற்றிப் பேசுவாரா? பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பிறகும் பதவியில் நீடிக்கும் காவல்துறைத் தலைகளைப் பற்றி வாய் திறப்பாரா? காவல் துறையினர் மட்டுமே அவருடைய படங்களைப் பார்க்கிறவர்களாக இருக்கிறார்களா என்ன?
எம்.ஜி.ஆர் ஆட்சி அமைக்க விரும்பும் ரஜினி - ''விசிலடிச்சான் குஞ்சுகள்'' என்பது உள்ளிட்ட எத்தனை விமர்சனங்களைக் கடந்து வந்தார் என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டாமா?
திரும்பவும் தூத்துக்குடிக்கே வருவோம்.
அங்கு நடந்தவை பொதுமக்களுக்கு எதிரான கொடுமையான உயிர்ப்பலிகள் என்று எதிர்க்கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கின்றன. வெளிவந்ததை விட, இன்னும் வெளிவராத அடக்குமுறைகளைப் பற்றி அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியுடன் விவரிக்கிறார்கள். தொலைக்காட்சிகளைத் தடுத்து, இணைய தள சேவையைத் துண்டித்து, மக்கள் கூடுவதைத் தடுத்ததை மீறி பெண்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், வாயில் சுடப்பட்ட கொடூரங்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கின்றன. பிரேதங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் இன்னும் நியாயம் கேட்டபடி இருக்கிறார்கள்.
எல்லோரும் முன்வைக்கிற கோரிக்கை- '' இதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி தலைமையிலான அரசு பதவி விலக வேண்டும்''
இந்த நிலையில் தூத்துக்குடிக்குச் சென்று திரும்பியதும் ரஜினி அரசுக்கு வக்காலத்து வாங்குகிறார். எடப்பாடியிடம் ராஜினாமா கோருவதைத் தடுக்கிறார். காக்கிச்சட்டை அணியாத காவல்துறை அதிகாரியைப் போலப் பேசுகிறார்.
பா.ஜ.க.வினர் அண்மைக்காலமாகச் சொல்லிவரும் 'பயங்கரவாதிகளின் கூடாரமாக மாறிக் கொண்டிருக்கிறது தமிழகம்'' என்பதை வழிமொழிந்து விஷக்கிருமிகளை அடையாளம் கண்டுபிடித்திருக்கிறார். அவர்களைப் பற்றித் தெரியும் என்கிறார்.
சீமானுக்கும், வேல்முருகனுக்கும் தூத்துக்குடிக்குள் செல்வதற்குக் கிடைக்காத அனுமதி ரஜினிக்கு மட்டும் சிறப்பாகக் கிடைக்கிறது என்றால் அவர் யாருடைய பிரதிநிதியாக தூத்துக்குடி சென்றார்? பா.ஜ.க. மற்றும் அ.தி.மு.க. அரசின் குரலாக அவர் இன்று பேசுகிறார் என்றால்- சில மாதங்களுக்கு முன்னால் இவரே வெளிப்படையாகச் சொன்ன ''தமிழக சிஸ்டம்'' இப்போது சரியாகிவிட்டதா?
'' மக்கள் குரலே மகேசன் குரல்'' என்பதை அவருக்கு அரசியலை உபதேசிக்கிறவர்கள் சொல்ல மறந்து விட்டார்களா?
ஜல்லிக்கட்டுக்காகப் போராடியவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் பற்றியும் பேசியிருக்கிறார் ரஜினி. அன்று நடந்த கொடூரத் தாக்குதல்களை நீதிமன்றமே கண்டித்தது.
நீதிபதி ராஜேஸ்வரன் தலைமையில் நியமிக்கப்பட்ட விசாரணை ஆணையத்தின் முடிவு இன்னும் வெளியாகாத நிலையில் '' எல்லாம் எனக்குத் தெரியும்'' என்று தீர்மானகரமாகச் செய்தியாளர்களுக்கு முன் முகம் கடுக்கப் பேசுகிற ரஜினிக்கு அன்றைய தாக்குதலுக்கு யார் உத்தரவிட்டார்கள் என்பதும் தெரிந்திருக்கலாம்.
தூத்துக்குடித் துப்பாக்கிச்சூட்டில் குறிபார்த்துச் சுட யார் உத்திரவிட்டார்கள் என்பதும் '' ஆன்மீக அரசியல் பலத்தால்'' அவருக்குத் தெரிந்திருக்கலாம்.
அதைப் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ள அவர் முன் வருவாரா?
'' கரிகாலனோட மொத்த ரௌடித்தனத்தையும் பார்த்ததில்லை. பார்ப்பீங்க''- இது ''காலா'' படத்தில் ரஜினி பேசுகிற வசனம்.
படத்தை இயக்கியவர் பா.ரஞ்சித் என்பது வெளிப்படையாகத் தெரியும்.
பொதுவெளியில் '' சமூக விரோதிகள்'' விஷக்கிருமிகள்'' என்றெல்லாம் பேசி, திரை வாழ்க்கைக்கு நேர் எதிராகப் போராட்டங்கள் நடந்தால் தமிழ்நாடே சுடுகாடாகிவிடும்'' என்றெல்லாம் தீவிரமாகப் பேசிய ரஜினியின் வசனங்கள் யாருடையவை?
அரசியல் கட்சியாக உருவெடுக்கும் முன்பே அவரை இப்படி இயக்கும் அசலான இயக்குநர்கள் யார்?
அதைத் தெரிந்து கொள்ள வழக்கம் போல '' அப்பாவிகளாக'' அல்லது ''கிருமிகளாக''க் காத்திருக்கிறார்கள் தமிழக மக்கள்!
[பகுதி 1]