ரஜினி வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டி..? ரகசிய ஆய்வு நடத்தி வரும் டீம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்றத் தேர்தலில் தனது சொந்த கிராமமான நாச்சிக்குப்பத்தை உள்ளடக்கிய வேப்பனஹள்ளி தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் ரஜினி கட்சியே தொடங்காத நிலையில் இது கொஞ்சம் ஓவர் தான் என நினைக்கிறீர்களா, ஆனால் கள யதார்த்தம் அது தான். கர்நாடக மாநில எல்லையை ஒட்டி அமைந்துள்ளது வேப்பனஹள்ளி தொகுதி.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இந்த தொகுதியில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு இணையாக கன்னடம், மராட்டிய மொழி மேசும் சவுராஷ்டிரர்கள் கணிசமாக உள்ளனர். இதையெல்லாம் மனதில் வைத்து தான் ரஜினிக்கான டீம் அங்கு ஆய்வு நடத்தியதாக கூறப்படுகிறது.
டெல்லி நல்லபடியா முடிஞ்சாச்சு.. அடுத்து கொல்கத்தாவும், சென்னையும் பாக்கி இருக்கு.. பிகே செம பிஸி!
ஜவ்வுமிட்டாய்
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரும் விவகாரம் ஜவ்வுமிட்டாயை போல் வழவழ கொழகொழ வென இழுத்துக்கொண்டே செல்கிறது. அவரது அரசியல் வருகை குறித்து, ''வருவார்... ஆனால் வர மாட்டார்'' என சினிமா படத்தில் என்னத்த கண்ணையா கூறிய ''வரும்... ஆனால் வராது..'' என்ற வசனத்துடன் கூடிய மீம்ஸ்கள் போடப்பட்டு வருகின்றன. இப்படி ரஜினி அரசியல் பிரவேசம் தொடர்பாக நாளொரு வண்ணமும் பொழுதொரு மேனியுமாக விவாதங்களும், பரபரப்பு செய்திகளும் வெளியாகி வருகின்றன.
ஏப்ரல் மாதம்
இந்நிலையில் ரஜினிகாந்த் சத்தமின்றி, எவ்வித ஆர்ப்பாட்டமின்றி தனது அரசியல் வருகைக்கான பணிகளை செய்துகொண்டு வருகிறார். முதலில் அவருக்கு ஆலோசனை கூறுவதற்காக ஒரு டீமை உருவாக்கி தன்னுடன் வைத்துக்கொண்டார். இப்போது கட்சியை தொடங்குவதற்கான பணிகளில் சுறுசுறுப்பு காட்டி வருகிறார். அதன் முன்னோட்டமாகவே ரஜினி பாமக கூட்டணி குறித்தெல்லாம் தமிழருவி மணியன் பேசியிருந்தார். வரும் ஏப்ரலில் கட்சியை தொடங்குவதற்கான பணிகளில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.
ஆய்வு
ரஜினிகாந்த் முன்பொரு முறை தனது ரசிகர்கள் மத்தியில் உரையாற்றிய போது தாம் ஒரு பச்சைத்தமிழன் என்றும், தனது அப்பா, தாத்தா உள்ளிட்ட அனைவரும் கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள நாச்சிக்குப்பம் கிராமத்தில் தான் பிறந்தார்கள், வாழ்ந்தார்கள் எனக் குறிப்பிடிருந்தார். மேலும், ரஜினிகாந்தும் அந்த கிராமத்தில் தான் 4 வயது வரை இருந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே ரஜினி அவரது சொந்த கிராமம் அடங்கிய வேப்பனஹள்ளியில் போட்டியிட்டால் எப்படி இருக்கும் என ரகசிய ஆய்வு நடத்தப்பட்டதாம்.
3 மொழிகள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள வேப்பனஹள்ளி தொகுதி தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லையில் அமைந்துள்ளது. இந்த தொகுதியில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு இணையாக கன்னட மொழி பேசுபவர்களும், சவுராஷ்டிரர்களும் வசித்து வருகின்றனர். இதனால் நிச்சயம் இந்த தொகுதி ரஜினிக்கு சாதகமானதாகவே இருக்கும் என தெரியவந்துள்ளதாம். இதனிடையே இப்போது அந்த தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருப்பவர் அதிமுகவை சேர்ந்த முருகன் என்பது குறிப்பிடத்தக்கது.