வாங்க.. நடிங்க.. சம்பாதிங்க.. போங்க.. அவ்வளவுதான்.. நாட்டை ஆளும் உரிமை எனக்குத்தான்- சீமான் ஆவேசம்
கலைத் துறைக்கு வாங்க. நடிங்க. சம்பாதிங்க. அவ்வளவுதான். நாட்டை ஆளும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது என்று சீமான் ரஜினிக்கு பதில் அளித்துள்ளார்.
சென்னை: கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஸ்டாலின், திருமாவளவன், அன்புமணி, சீமான் போன்றவர்கள் அரசியலில் இருந்தாலும் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை கடுமையாக சீமான் எதிர்த்து வருகிறார்.

ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம்
இன்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போது, ரஜினி அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் திட்டவட்டமாக கூறினார். மேலும், ரஜினி வந்தால் என்னென்ன செய்வேன் என்று சொல்கிறாரோ அதனை தாங்களே செய்து கொள்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வெள்ளைக்காரனை ஏன் விரட்டினீர்கள்..
44 ஆண்டுகள் தமிழகத்தில் வாழ்ந்த நீங்கள் பச்சைத் தமிழன் என்றால், பல நூறு ஆண்டுகள் இந்த ஆண்டை ஆண்டு வெள்ளைக்காரனை ஏன் விரட்டினீர்கள். நீண்ட காலமாக மகாராஷ்டிரத்தில் வாழும் தமிழர்கள் மராட்டியர்கள் என்று சொல்லிவிடுவார்களா?

நடிங்க.. போங்க..
திரைத்துறை, கலைத் துறை என எதற்கு வேண்டுமானாலும் வாங்க, நடிங்க, சம்பாதிங்க, போங்க, அவ்வளவுதான். நாட்டை ஆளும் உரிமை எனக்குத்தான் இருக்கிறது. வருவோர் போவோரிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு அடிமையாக வாழ முடியாது.

காவிரியில் தண்ணீர் இல்லை.
ஜனநாயகம் என்ன ஜனநாயகம். காவிரியில் தண்ணீர் இல்லை என்று விரட்டும் போது எங்கே போனது ஜனநாயகம். தமிழகத்தின் வரலாறு தெரியாதவர்கள் தமிழகத்தின் அரசியலுக்கு வர வேண்டாம் என்று சீமான் ஆவேசமாக கூறினார்.












Click it and Unblock the Notifications