என்னதான் நடக்கிறது ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில்? ரசிகர்கள் கடும் ஆதங்கம்
சென்னை: ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தில், என்னதான் நடக்கிறது என்ற ஆதங்கம் அவர் ரசிகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அரசியல் கட்சி துவங்கப்போவதாக கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில், அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஓராண்டு ஆகப்போகும் நிலையில், இதுவரை பெரிய அளவில் எந்த ஏற்பாடும் செய்யப்படவில்லை.
ரசிகர் மன்றங்களை பலப்படுத்த வேண்டும் என்பதில் மட்டும் ரஜினிகாந்த் தீவிரம் காட்டி வருகிறாராம்.

ரஜினி ரசிகர் மன்றம்
ஆனால் அங்கும் ஒரு சிக்கல். ரசிகர் மன்ற நிர்வாகிகளை கையாளுவதில் ரஜினிகாந்த் தடுமாறி வருகிறார். ரஜினி மக்கள் மன்றத்திற்கான மாநில செயலாளராக பதவி வகிக்கும் ராஜு மகாலிங்கம் நீக்கப்பட்டதாக கடந்த ஜூலையில் ஒரு செய்தி தீயாக பரவியது. இதை தலைமை மறுத்தது. இருப்பினும், ராஜு மகாலிங்கம், மற்றொரு நிர்வாகி சுதாகர் ஆகியோரை ஓரம் கட்டி விட்டு, இளவரசன் என்பவரை பொறுப்புக்கு கொண்டு வந்திருக்கிறார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மன்ற கூட்டங்கள்
இளவரசனை வைத்துதான், மன்ற கூட்டங்களை ரஜினிகாந்த் நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரும், மக்கள் மன்றத்தில் கட்டுக்கோப்புடன் இல்லாதவர்களை கடுமையாக கண்டித்து வருவதாக கூறப்படுகிறது. மன்றத்தில் இருந்தே நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று அவர் கூறிவருவதாகவும், இதனால் நீண்ட கால ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரசிகர்களுக்கு பொறுப்பு
மேலும், நீண்டகாலமாக ரசிகர்களாக இருந்து வரும் அடிமட்டத்தில் உள்ள யாரையும் நிர்வாகிகளாக நியமிக்காமல், ராஜு மகாலிங்கம் முதல் இப்போதைய நிர்வாகிகள் வரையில் அதிகாரம் கொடுக்கப்படுவதும், ரசிகர்களை முனுமுனுக்க வைத்துள்ளது, சில ரசிகர்கள், ரஜினியை காண சென்னைக்கு வருவதை தவிர்த்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
நிர்வாகிகள் நியமனம் மற்றும் ரசிகர்கள் கட்டுப்பாடு என்ற விஷயத்தில், ரஜினிகாந்த் தடுமாற முக்கிய காரணம், அவர் தொடர்ந்து சூட்டிங்குகளில் பிசியாக இருப்பதுதான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ரஜினியே நேரடியாக மன்ற நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும் என்பதுதான் அவரின் தீவிர ரசிகர்கள் கோரிக்கையாக உள்ளது. ஆற்றில் ஒருகால், சேற்றில் ஒரு கால் வைத்தால், கரை சேர முடியாது என்பதையே ரஜினிக்கு அவர் ரசிகர்கள் சொல்ல விரும்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications