ஜெயலலிதா நினைவிடத்தில் 5000 ரஜினி ரசிகர்கள் அஞ்சலி- ரஜினி அரசியலுக்கு வர கோரிக்கை
சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
கடந்த 5ஆம் தேதி இரவு முதல்வர் ஜெயலலிதா மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவரது உடல் சென்னை மெரினாவில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது சமாதியில் தினந்தோறும் அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரஜினிகாந்த் ரசிகர்கள் இன்று காலையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து ஊர்வலமாக சென்னை மெரினா கடற்கரைக்கு வந்தனர்.
ஜெயலலிதா சமாதிக்கு வந்த அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். ஒரே நேரத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி ரசிகர்கள், நடிகர் சங்கம் சார்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்திய அஞ்சலியில் தலைவர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு ஜெயலலிதா குறித்து சில மறக்க முடியாத நினைவுகளை பகிர்ந்து கொண்டார். அவரது பேச்சு மிகவும் உருக்கமாக இருந்தது. அதனால் அவரின் ரசிகர்களாகிய நாங்கள் சேப்பாக்கம் மாளிகையில் இருந்து அமைதி ஊர்வலமாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று அஞ்சலி செலுத்தினோம் என்று கூறினார். புரட்சி தலைவி ஜெயலலிதா வழியில் தலைவர் ரஜினிகாந்தும் அரசியலுக்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின்னர் அவரது உடலுக்கு குடும்பத்துடன் வந்து அஞ்சலி செலுத்தினார் ரஜினிகாந்த். நடிகர் சங்கம் சார்பில் நடைபெற்ற இரங்கல் நிகழ்ச்சியில் ஜெயலலிதாவை மகாத்மா என்று கூறி புகழாரம் சூட்டினார் ரஜினி. இந்த நிலையில் அவரது ரசிகர்கள் ஏராளமானோர் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.