கபாலி வழக்கு... ஹைகோர்ட்டில் சுவாரஸ்ய விவாதம்... 'மகிழ்ச்சி' என்ற நீதிபதி கிருபாகரன்
சென்னை: கபாலி பட டிக்கெட் கொள்ளை பற்றியும், படத்திற்கு தடை கோரியும் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது நீதிபதி 'கிருபாகரன்' மகிழ்ச்சி என்று கபாலி படத்தில் ரஜினி கூறுவது போல சொன்னது , சிரிப்பலையை ஏற்படுத்தியது.
இன்றைய கால கட்டத்தில் எந்த படமும் கோர்ட்டுக்கு போகாமல் ரிலீஸ் ஆவதில்லை. எந்த சிக்கலுமே இல்லை என்றாலும் விளம்பரத்திற்காகவாவது வழக்கு போட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றனர்.
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படம் கபாலி. இந்த படம் வெள்ளிக்கிழமை 22ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. டிக்கெட் புக்கிங் சில மணிநேரங்களிலேயே முடிந்து விட்டது. ஒரு வாரத்திற்கு டிக்கெட் என்று கிளப்பி விடுகின்றனர். ஒவ்வொரு டிக்கெட்டும் ஆயிரக்கணக்கில்தான் என்கின்றனர். சில தியேட்டர்கள் விலை எவ்வளவு என்று சொல்லாமலேயே புக்கிங் மட்டும் செய்துள்ளனர்.
கபாலி படத்தின் டிக்கெட் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதால் கபாலி படத்தைத் தடை செய்ய வேண்டும் என, சென்னையைச் சேர்ந்த தேவராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், கபாலி படத்துக்கு பொதுமக்களிடம் இருந்து அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக அரசு தலைமைச் செயலாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கடந்த 15ம் தேதி தபாலில் புகார் மனு அனுப்பினேன். அதன்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எனது மனுவை முடித்துவைக்கும் வரை கபாலி படத்தை வெளியிடத் தடை விதிக்க வேண்டும். என்று கூறப்பட்டிருந்தது.

தக்காளி சட்டினியா?
இந்த மனு மீதான விசாரணை நீதிபதி கிருபாகரன் முன்பு நடைபெற்றது. அப்போது, திருட்டு விசிடி வந்தால் குதிக்கிறார்கள், அதிக கட்டணத்தில் டிக்கெட் விற்றால் ஏதும் செய்வதில்லை. அவர்களுக்கு வந்தால் ரத்தம், பொதுமக்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா? என்று வாதிட்டனர்.

ஹைகோர்ட்டில் விசாரணை
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருபாகரன், திரையரங்குகளில் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகாரை அதிகாரிகளுக்கு மனுதாரர் கடந்த 15ம் தேதி தபாலில் அனுப்பியுள்ளார். அந்த மனு அதிகாரிகளிடம் போய்ச் சேர்ந்ததா, இல்லையா என்று அவர் தெரிந்து கொள்ளவில்லை.

புகார் போய் சேர்ந்ததா?
புகார் மீது நடவடிக்கை எடுக்க போதிய கால அவகாசமும் அளிக்கவில்லை. அதற்கு முன்னதாகவே மனுதாரர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். எனவே, புகார் மனு அதிகாரிகளுக்கு போய்ச் சேர்ந்ததா இல்லையா என்பதைத் தெரிந்து கொண்ட பிறகு நீதிமன்றத்துக்கு வரலாம் அவ்வாறு வருவதற்கு மனுதாரருக்கு தடை இல்லை என்றார்.

வழக்கு தொடுப்பது ஏன்?
கபாலி படத்திற்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தீர்பளித்தார் நீதிபதி கிருபாகரன். விசாரணையின் போது, பெரிய நட்சத்திரங்கள், பெரிய பட்ஜெட் படங்கள் வந்தால் இவ்வளவு செலவு செய்து வழக்கு தொடுப்பது ஏன் என்று நீதிபதி கேட்டார்.

நீதிபதி மகிழ்ச்சி
அதற்கு வழக்கறிஞர், தாங்கள் எப்படி சமூக அக்கறையுடன், சில வழக்குகளில் தீர்ப்பு வழங்குகிறீர்களோ, அது மாதிரி தான் இதுவும் சமூக அக்கறை என்றார். இதற்கு நீதிபதி, கபாலி படத்தில் ரஜினி சொல்வது போல "மகிழ்ச்சி" என்றார். இதனால், நீதிமன்றத்தில் சிரிப்பலை நிலவியது.












Click it and Unblock the Notifications