ராஜினாமா தீர்வாகாதா?... அப்ப டிசம்பர் 31ல் நீங்கள் பேசியது சும்மா ஜுஜுபியா ரஜினி சார்?
ராஜினாமா செய்வது தீர்வாகாது என்று பேசும் ரஜினி, கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ஓராண்டுக்குள் தன்னால் நல்லாட்சி தர முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுவேன் என்றாரே, அது என்ன.
Recommended Video
சென்னை: ராஜினாமா செய்வது தீர்வாகாது என்று பேசும் ரஜினிகாந்த் கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி ரசிகர்களிடையே பேசுகையில் தன்னால் ஓராண்டுக்குள் நல்லாட்சி தர முடியாவிட்டால் பதவியிலிருந்து விலகுவேன் என்றீர்களே , அது என்ன சும்மா பேசியதா சார்?
தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், காயமடைந்தவர்களையும் சந்திக்க இன்று காலை தூத்துக்குடி சென்றார். அங்கு மருத்துவமனையில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லாத்துக்கும் ராஜினாமா, ராஜினாமான்னு சொல்லிட்டு இருக்கிறது சரியா இருக்காது. அந்த அரசியலில் எனக்கு விருப்பமும் இல்லை. தப்பு நடந்திருச்சு இனிமே சரி பண்ணிக்கணும் என்றார்.
ரஜினி
இன்று ரஜினி பேசிய பேச்சுகள் அனைத்துமே அவரது ரசிகர்களை தவிர்த்து சாதாரண மக்களால் ரசிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு குழப்பங்கள் நிறைந்தவைகளாக இருந்தன. எல்லாவற்றிலும் இரட்டை நிலைப்பாடு கொண்டிருக்கிறார்.
கோர்ட்டுக்கு செல்லுங்கள்
எல்லா விஷயத்துக்கும் போராட்டம் தீர்வாகாது என்றால் காந்தி நடத்திய போராட்டங்களையும் தவறு என்கிறாரா. வன்முறைதான் தீர்வாகாது, ஆனால் அறவழியில் போராடினால் என்ன தவறு. போராடுவதை விட்டு விட்டு கோர்ட்டுக்கு செல்லுங்கள் என்கிறார். தண்ணீர் பிரச்சினை, அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காதது, சாலை விபத்துகள் உள்ளிட்டவற்றுக்கு கூட போராடாமல் கோர்ட் படியை மிதிப்பது சரியா.
மிருகத்துக்கு எதிராக போராட...
அனில் அகர்வால் மனிதனே இல்லை என்கிறார் ரஜினி. சரி அவர் மனிதன் இல்லாவிட்டால் மிருகம் என்றுதானே அர்த்தம். நம் உயிரை, உரிமையை நிலைநாட்ட வேண்டுமென்றால் மிருகத்துடன் போராடினால்தானே முடியும். ஆற்றில் முதலைகள் நிறைய இருக்கு என்பதற்காக அக்கரைக்கு செல்ல ஆற்றில் கால் வைக்காமல் இருக்க முடியுமா.
சரி செய்யனும்
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று எடப்பாடியை ராஜினாமா செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுக்கின்றன. இதற்கு பதிலளித்த ரஜினி, எல்லாவற்றுக்கும் ராஜினாமா ராஜினாமானு சொல்லிகிட்டு இருக்க முடியாது. தப்பு நடந்து போச்சு இனிமே அதை சரி செய்து கொள்ள வேண்டும் என்றார். ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்கிறாரா.
ஏன் இரட்டை பேச்சு
டிசம்பர் 31-ஆம் தேதி ரசிகர்கள் மத்தியில் ரஜினிகாந்த் பேசுகையில் நான் அரசியலுக்கு வருவது உறுதி. ஓராண்டுக்குள் என் கட்சியின் அரசால் நல்லாட்சி கொடுக்க முடியவில்லை என்றால், ராஜினாமா செய்து விடுவோம் என்றார். இந்த இரு சம்பவங்களிலும் ரஜினியின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ள முடியவில்லையே. இதுபோல் பேசுவதை பார்த்தால் அருணாசலம் படத்தில் கோடி கோடியான பணத்தை சீக்கிரம் செலவு செய்யும் சவாலில் அரசியல் கட்சி தொடங்கி அதில் வேட்பாளர் ஜனகராஜை கண்டபடி பேச வைப்பது போன்று உள்ளது.