தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவார் ரஜினி.. நண்பர் ராஜ்பகதூர் உறுதி
தமிழகத்தின் தலையெழுத்தை ரஜினிகாந்த் நிச்சயம் மாற்றுவார் என்று அவரது நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்துள்ளார்.
வேலூர்: தமிழகத்தின் தலையெழுத்தை ரஜினிகாந்த் நிச்சயம் மாற்றுவார் என்றும் அவர் இந்த முறை ரசிகர்கள் சந்திப்பின்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்றும் நண்பர் ராஜ்பகதூர் தெரிவித்தார்.
கடந்த 20 ஆண்டுகளாக ரஜினி அரசியலுக்கு வருவாரா வரமாட்டாரா என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் படியாக கடந்த மே மாதம் நடைபெற்ற ரசிகர்களுடனான சந்திப்பின் போது ரஜினியின் பேச்சு இருந்தது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்பது தொடங்கி போர் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்பது வரைக்கும் பல்வேறு விஷயங்களை ரஜினி பேசினார்.
நிச்சயம் வருவார்
ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி கூறிய கருத்துகளுக்கு கடந்த ஜூலை மாதம் கண்டனம் தெரிவித்த ரஜினியின் நண்பர் ராஜ்பகதூர் பேசுகையில், ரஜினி நிச்சயம் அரசியலுக்கு வருவார். அவருக்கு சுப்பிரமணியன் சுவாமியை விட அரசியலுக்கு வர அறிவும் ஆற்றலும் நிறைய உண்டு என்றார்.
ராஜ்பகதூர் கருத்து
ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் என்பதால் அவரது அனுமதியின்றி அரசியல் தொடர்பான கருத்துகளை தெரிவித்திருக்கமாட்டார் என்ற கருத்து நிலவியது. இதைத் தொடர்ந்து ரஜினி எப்போது அறிவிப்பார் என்று அனைவரும் காத்துக் கொண்டிருந்தனர்
6 நாட்களுக்கு சந்திப்பு
ரஜினிகாந்த் வரும் 26-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார். இந்த நேரத்தில் அரசியல் பிரவேசம் குறித்து நிச்சயம் அறிவிப்பார் என்ற தகவல் வந்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
ரஜினி வருவார்
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த கேவி குப்பத்தில் ரஜினி ரசிகர்கள் ஏற்பாடு செய்த பிறந்தநாள் விழா நலத்திட்ட உதவிகளை நண்பர் ராஜ்பகதூர் வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், ரஜினிக்கு பல முகம் உள்ளது. அவருக்கு மேலும் ஒரு முகம் உள்ளது. அதுதான் தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி எடுக்க போகும் முகம் என்றார் ராஜ்பகதூர்.