3 தமிழர் விடுதலை வழக்கில் விரைவில் தீர்ப்பு- தலைமை நீதிபதி தகவலுக்கு கருணாநிதி எதிர்ப்பு
சென்னை: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் 25-ந் தேதிக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்த தகவலுக்கு திமுக தலைவர் கருணாநிதி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ராஜிவ் கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், கோவையில் வெள்ளிக்கிழமை நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் வரும் 25-ந் தேதிக்குள் முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று ராஜிவ் கொலை வழக்கினை பற்றி வெளிப்படையாகத் தெரிவித்தார். அது அனைத்து நாளேடுகளிலும் வெளி வந்தது.
வரும் 24ந் தேதியன்று நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நீதிபதி சதாசிவம் அவர்கள் தான் ஓய்வு பெறவுள்ள 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்திலே ஏற்படுத்துமோ என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் மத்தியில் இது பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு வரும் என்று, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தக் கூடும் என்பதையும், அது நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.
இவ்வாறு கருணாநிதி தமது அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications