சகாயம்: உயர் நீதிமன்ற கண்டனத்திற்கு பிறகாவது தமிழக அரசு திருந்த வேண்டும் – ராமதாஸ்

அவருடைய அறிக்கையில் "தமிழ்நாட்டில் நடைபெற்ற கிரானைட் மற்றும் தாது மணல் ஊழல் குறித்து விசாரிக்க இ.ஆ.பெ அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்ற நீதிமன்ற ஆணையை செயல்படுத்தத் தவறியதற்காக தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழக அரசுக்கு ரூபாய் 10,000 அபராதம் விதித்தும் நீதிபதிகள் ஆணையிட்டுள்ளனர். தமிழக அரசை உயர்நீதிமன்றம் கண்டித்திருப்பதோ, அபராதம் விதித்திருப்பதோ எந்த வகையிலும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ தரவில் லை.
ஏனெனில், தமிழகத்தின் மிகப்பெரிய ஊழலாக உருவெடுக்க இருக்கும் இம்முறைகேடுகள் குறித்து விசாரித்து உண்மைகளை வெளிக்கொண்டு வரவும், இதற்கு காரணமானவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மாறாக, உண்மைகளை மறைப்பதிலும், ஊழல்வாதிகளை காப்பாற்றுவதிலும் தான் தீவிரம் காட்டியது. கனிம ஊழல் குறித்து விசாரிக்க அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டு, அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்த பிறகும் சகாயம் குழு விசாரணைக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு அளிப்பதற்கு மாறாக முட்டுக்கட்டைகளைத் தான் போட்டது.
கிரானைட் ஊழலும், தாதுமணல் ஊழலும் புதிதாக நடைபெற்ற ஊழல் அல்ல. பல ஆண்டு களாகவே இந்த ஊழல்கள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆட்சியின் போது, எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த ஜெயலலிதா, மேலூர் பகுதியில் நடைபெறும் கிரானைட் கொள்ளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டப்பேரவைத் தேர்தலின்போதும் கிரானைட் ஊழலை முன்வைத்தே தென்மாவட்டங்களில் ஜெயலலிதா பிரச்சாரம் செய்தார்.
அ.தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் தொழில்துறை அமைச்சராக பதவியேற்ற எஸ்.பி. வேலுமணி, கிரானைட் ஊழல் குறித்து திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டதுடன், அதற்குக் காரணமான வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். ஆனால், இருவருமே அவர்கள் வகித்து வந்த பதவிகளிலிருந்து நீக்கப்பட்டது தான் நடந்ததே தவிர, கிரானைட் கொள்ளையர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதன் முதல்கட்டமாக உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதித்து, நாளை மறுநாளுக்குள் இ.ஆ.ப அதிகாரி சகாயம் தலைமையில் குழுவை அமைத்து, கனிம ஊழல் பற்றி விசாரணை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் நான் ஏற்கனவே கூறியவாறு, இப்போது தமிழக அரசை நீதிமன்றம் தண்டித்துள்ள நிலையில், வெகுவிரைவில் பொதுமக்களும் தண்டிப்பார்கள் என்பது உறுதியாகும்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications