பாமக மாநாட்டிற்கு தொண்டர்கள் ராணுவ கட்டுபாட்டுடன் வந்து செல்ல வேண்டும் - ராமதாஸ்
சென்னை: பாட்டளி மக்கள் கட்சியின் மாநில மாநாட்டிற்கு தொண்டர்கள் ராணுவ கட்டுப்பாட்டுடன் வந்து செல்ல வேண்டும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
வண்டலூரில் நடைபெறவிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநாடு தமிழக வரலாற்றில் பெரிய மைல்கல்லாக அமையப்போவது உறுதி. அந்த அளவுக்கு மாநாட்டு நிகழ்ச்சிகள் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதற்கெல்லாம் மேலாக இதுவரை எந்த அரசியல் கட்சியின் மாநாட்டுக்கும் இந்த அளவுக்கு மக்கள் கூடியதில்லை என்று கூறும் அளவுக்கு பல லட்சக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை மற்றும் செயல்திட்ட அறிவிப்புகளை கேட்பதற்காக வண்டலூர் மாநாட்டுத் திடலில் நாளை காலை முதலே குவியத் தொடங்கி விடுவார்கள்.
இவை அனைத்தையும் விட நான் எதிர்பார்க்கும் முக்கியமான விஷயம் மாநாட்டுக்கு வருகை தரும் தொண்டர்களும், பொதுமக்களும் அமைதியாக வந்து செல்ல வேண்டும் என்பது தான். கடந்த ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பா.ம.க. முதலமைச்சர் வேட்பாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவிக்கப்பட்டதில் தொடங்கி இதுவரை 8 மண்டல மாநாடுகளை வெகு சிறப்பாக நடத்தியிருக்கிறோம்.
அந்த மாநாடுகளுக்கு அழைப்பு விடுத்து நான் வரைந்த மடல்களில் தொண்டர்கள் அமைதியாகவும், போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமலும் வந்து செல்ல வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தேன். அதை பின்பற்றி 8 மாநாடுகளையும் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் நடத்த தொண்டர்கள் உதவினர். அதேபோல், மாநில மாநாட்டையும் அமைதியாகவும், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் நடத்த தொண்டர்களும், பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும்.
மாநாடு நடைபெறும் இடம் தலைநகர் சென்னையின் நுழைவாயிலான வண்டலூரில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்திருப்பதால் போக்குவரத்துக்கு எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படாமல் உறுதி செய்ய வேண்டியது நமது கடமை ஆகும். எனவே, வண்டலூரில் நாளை நடைபெறவுள்ள பா.ம.க. மாநில மாநாட்டுக்கு வரும் தொண்டர்களின் ஒரு வாகனம் கூட நெடுஞ்சாலையில் நிறுத்தப்படக்கூடாது.
மாநாட்டுத் திடலையொட்டி அமைக்கப்பட்டுள்ள வாகன நிறுத்துமிடத்தில் பல்லாயிரக்கணக்கான வாகனங்களை நிறுத்த வசதி செய்யப்பட்டிருப்பதால், அனைவரும் வாகனங்களை அங்கு நிறுத்திவிட்டு மாநாட்டுத் திடலுக்கு சென்று அமர வேண்டும் என்று தொண்டர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
இனி வரும் காலங்களில் எந்த அரசியல் கட்சி மாநாடுகள் நடந்தாலும் அதில் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளுக்கு நமது இந்த மாநாடு தான் முன்னுதாரணமாக அமைய வேண்டும். அந்த அளவுக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர்களும், பொதுமக்களும் ராணுவக் கட்டுப்பாட்டுடன் பா.ம.க. மாநில மாநாட்டுக்கு வந்து செல்ல வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.