கூட்டணிக்கு 8 கட்சிக்கு அழைப்பு-ஒருத்தரும் கண்டுகொள்ளலையே: 'அப்செட்டில்' டாக்டர் ராமதாஸ்!
சென்னை: சடசபை தேர்தலில் கூட்டணி அமைக்க 8 கட்சிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ரமதாஸ் அழைப்பு விடுத்தும் எந்த ஒரு கட்சியும் பதிலேதும் சொல்லாததால் அவர் ஆழ்ந்த வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
பாட்டாளி மக்கள் கட்சி கடந்த சில மாதங்களாக தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கிறது. திமுக தலைவர் கருணாநிதியுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் நெருக்கம் காண்பிக்க திமுக கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று யூகங்கள் கிளம்பின.
ஆனால் அதை மெல்ல மெல்ல மறுத்த ராமதாஸ், பாமக செயற்குழுவில் பொதுக்குழுவில் அதிமுக- திமுக இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி கிடையாது என்று அறிவித்தார். அப்படி அறிவித்த கையோடு புதிய கூட்டணிக்கு அழைப்பும் விடுத்தார்.
அதில் பேசிய ராமதாஸ், 2016-ம் ஆண்டுடன் திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வந்து 50 ஆண்டுகள் முடிகின்றன. திராவிட இயக்கத்தின் கடைசி பாகத்தை தி.மு.கவும், அ.தி.மு.கவும் எழுதிக்கொண்டிருக்கின்றன. மக்கள் நலன், தமிழகத்தின் வளர்ச்சியில் அக்கறைகொண்ட கட்சிகளை ஒருங்கிணைத்துப் புதிய அணியை நாம் உருவாக்க வேண்டும். அ.தி.மு.கவுக்கு நாங்கள் ஊ.தி.மு.க என்று பெயர்சூட்டுகிறோம். அதாவது, ஊழல் தி.மு.கவை குறை சொல்வதால் தி.மு.கவுடன் கூட்டணியா? என்று கேட்பார்கள். இந்தியாவிலேயே ஊழலுக்கு என்று தனி விசாரணைக் கமிஷன் அமைத்தது தி.மு.கவுக்கு மட்டும்தான். அதனால், இந்த இரண்டு ஊழல் கட்சிகளையும் நாம் தள்ளிவைக்க வேண்டும். அதற்கான நேரம் நெருங்கி வந்திருக்கிறது. சட்டசபை தேர்தலின்போது, ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அதேபோல இப்போதும் அவர் குரல் கொடுக்கவேண்டும். ம.தி.மு.க., காந்திய மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி, கொங்கு நாடு மக்கள் கட்சி, ஐ.ஜே.கே, தமிழர் தேசிய முன்னணி, புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி ஆகிய 8 கட்சிகளும் பாமக தலைமையிலான கூட்டணியில் இணைய வேண்டும் என்றும் ராமதாஸ் அழைப்பு விடுத்தார்.
பாமக பொதுக்குழு- செயற்குழு முடிவடைந்து ஒருவாரம் ஆகியும் எந்த ஒரு கட்சியுமே ராமதாஸ் அழைப்பு பற்றி வாயே திறக்காமல் மவுனமாக இருக்கின்றன. இது ராமதாஸை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியிருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.