முல்லைப் பெரியாறு அருகே புதிய அணையா? ஆய்வை தடுத்து நிறுத்த ராமதாஸ் வலியுறுத்தல்...
சென்னை: முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட மீண்டும் ஆய்வுப் பணிகளை தொடங்கியுள்ள கேரள அரசை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்ட கேரள அரசு மீண்டும் ஆய்வுப் பணியைத் தொடங்கியுள்ளதால் தென் மாவட்ட விவசாயிகளிடையே அச்சமும், பதற்றமும் அதிகரித்துள்ளது. இந்த ஆய்வுப் பணிகளை தடுத்த நிறுத்த தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இது தொடர்பாக பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணை வலுவாக இருப்பதாகவும், அதற்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டிய தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு தெளிவாக ஆணையிட்டிருந்தது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வை கேரள அரசு மேற்கொள்வது சரியல்ல.
வேடிக்கை பார்க்கும் தமிழக அரசு
வல்லக்கடவு பாதையில் 15 இடங்களில் கேரள அரசு ஆய்வு மேற்கொண்ட போது தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அப்பணிகளை நிறுத்திய கேரளா, தமிழகத்தில் செயல்படாத அரசு பதவியிலிருப்பதைப் பயன்படுத்திக் கொண்டு இப்போது மீண்டும் தொடங்கியிருக்கிறது. இதைத் தடுக்க தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
சட்டம் ஒழுங்கு பாதிக்கும்!
2011 ஆம் ஆண்டின் இறுதியில் முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தீவிரமடைந்ததால் தமிழகத்தில் மதுரை, தேனி மாவட்டங்களில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகவும் உருவெடுத்தது. மீண்டும் அதேபோன்ற நிலை ஏற்படுவதற்கும், இரு மாநில உறவுகள் பாதிக்கப்படுவதற்கும் கேரள அரசு வழி வகுக்கக் கூடாது.
ஆய்வுப் பணிகளை தடுக்க வேண்டும்
தமிழக அரசும், மத்திய அரசும் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட கேரள அரசு மேற்கொண்டு வரும் ஆய்வுப் பணிகளை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு தமது அறிக்கையில் ராமதாஸ் கூறியிருக்கிறார்.