விடுதலை செய்யப்பட்ட 287 தமிழர்கள் பத்திரமாக ஆந்திராவிலிருந்து வருவதை உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்
சென்னை: ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட 287 தமிழர்களை ஆந்திர காவல்துறை விடுவிக்குமா? அல்லது வேறு பொய்வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்குமா?- என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திர அரசின் திட்டத்தை முறியடித்து 287 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

ஆந்திர வனத்துறை அதிகாரிகள் இருவர் கடந்த 2013 ஆம் ஆண்டு திசம்பர் 15 ஆம் தேதி கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 287 தமிழர்கள் உள்ளிட்ட 347 பேரையும் விடுதலை செய்து திருப்பதி சிறப்பு நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. இத்தீர்ப்பின் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக சிறையில் வாடியவர்கள் விடுதலை ஆவது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை தான். ஆனாலும், வேறு வேலைகளுக்காக சென்ற தமிழகத் தொழிலாளிகளை ஆந்திர காவலர்கள் கைது செய்து சிறைகளில் அடைத்தனர்.
இந்த வழக்கில் தமிழகத் தொழிலாளர்களுக்கு ஆந்திரக் காவல்துறையினரால் இழைக்கப்பட்ட கொடுமைகள் கொஞ்சநஞ்சமல்ல. பிடிபட்ட சில தமிழக தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் அடித்துக் கொடுமைப்படுத்திய வீடியோ காட்சி சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி பார்ப்பவர்களையெல்லாம் உறைய வைத்தது. இரு ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்கள் இப்போது விடுதலையாகியிருந்தாலும், அவர்கள் அனுபவித்தக் கொடுமைகளும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும் ஈடுசெய்ய முடியாதவை.
இந்த வழக்கில் தமிழக தொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டப் பிறகும், அவர்களை ஆந்திரக் காவல்துறையினர் கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றது மிகப்பெரிய மனித உரிமை மீறலாகும். இந்தக் கொடுமையைப் பார்க்கும்போது, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டத் தொழிலாளர்களை ஆந்திர காவல்துறை விடுவிக்குமா? அல்லது வேறு பொய்வழக்கில் கைது செய்து மீண்டும் சிறையில் அடைக்குமா?- என்ற ஐயம் ஏற்பட்டிருக்கிறது. ஆந்திர அரசின் திட்டத்தை முறியடித்து 287 தமிழர்களும் விடுதலை செய்யப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்காக ஆந்திர அரசிடமிருந்து உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விடுதலை செய்யப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் நிரந்தர வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தரும் வகையில், அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்காக அரசு நிதியுதவி வழங்க வேண்டும். ஆந்திர அரசால் தொடரப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் வாடும் மற்ற தமிழகத் தொழிலாளர்களை விடுதலை செய்யவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கெல்லாம் மேலாக, கடந்த ஆண்டு 20 தமிழகத் தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி, கொலையாளிகளை தண்டிக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications