நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 9 தமிழக மீனவர்கள் கைது.! இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி தமிழக மீனவர்களைக் கைது செய்யும் போக்கு தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேரை இப்போது இலங்கை கடற்படை மீண்டும் கைது செய்துள்ளது. படகையும் சிறை பிடித்துள்ள இலங்கை கடற்படை அவர்களிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்வதும், அவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி இலங்கை கடற்படை கைது செய்வதும் தொடர்கதையாகவே இருக்கிறது.

இது போல எல்லையில் மீன் பிடிக்கும் மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இப்போது மீண்டும் அதுபோல ஒரு கைது சம்பவம் நடந்துள்ளது.
கைது: ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் வழக்கம் போல மீன் பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கே வந்து இலங்கை கடற்படை எல்லையைத் தாண்டியதாக கூறி தமிழக மீனவர்களைக் கைது செய்தனர். மொத்தம் 9 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் அனைவரும் இப்போது காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து செல்லப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. மேலும், அவர்கள் பயன்படுத்திய இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை இப்போது பறிமுதல் செய்துள்ளது. விசாரணைக்குப் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.
தொடரும் சோகம்: தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகச் சொல்லி கைது செய்வதும், படகுகளைப் பறிமுதல் செய்வதும் தொடர் கதையாக இருக்கிறது. இலங்கை கடற்படையின் இந்த தொடர் நடவடிக்கையால், தமிழக மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 70+ மீனவர்களை இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ளது. மேலும், 8 விசைப்படகுகள், 4 நாட்டுப்படகுகளைப் பறிமுதல் செய்துள்ளது.
எல்லை தாண்டியதாகக் கூறி தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் நடவடிக்கைகள் தொடர்கதையாகி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications