தொடரும் இலங்கை அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை வேலைநிறுத்தம்!
இலங்கை ராணுவத்தின் தொடர் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் நாளை ஒரு நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ரமேஸ்வரம்: இலங்கை ராணுவத்தின் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து ராமேஸ்வரம் பகுதி விசைப்படகு மீனவர்கள் நாளை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடபோவதாக அறிவ்வித்துள்ளனர்.
மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், அவர்களை கைது செய்வதும் படகுகளை பறித்து செல்வதும் வாடிக்கையாகிவிட்டது.
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை மீட்க கோரியும் சிங்கள கடற்படை பறித்து சென்ற படகுகளை மீட்டுத் தரக்கோரியும் ரமேஸ்வரம் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருநாட்டு மீனவர்களும் பிரச்சனையின்றி மீன்பிடிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பாக இன்று ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் விசைப்படகு மீனவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது நாளை ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.