சுவாதி கொலை: என்கவுன்டர்ல கொன்னுடுவாங்களா? அச்சத்தில் ராம்குமார்
சென்னை: சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு உச்ச பட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சுவாதியின் பெற்றோர்களும், உறவினர்களும் வலியுறுத்தி வரும் நிலையில் தன்னை என்கவுன்டரில் கொன்று விடுவார்களோ என்று ராம்குமார் அச்சத்தில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 24ம் தேதி நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதியைக் கொடுரமாக கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று, பாளையங்கோட்டையிலிருந்து சென்னைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.
போலீஸ் பாதுகாப்புடன் ஆம்புலன்ஸில் வந்த ராம்குமார் பயணம் முழுவதுமே பயந்தபடியே வந்தாராம். தன்னை என்கவுண்டர் செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில், விழித்துக்கொண்டு தூங்காமலேயே இருந்துள்ளார். ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர்கள் உறங்கச் சொல்லியும் பயத்தால் ராம்குமார் தூங்கவில்லையாம்.
திருச்சி அருகே வரும்போது ராம்குமாருக்கு பயம் அதிகரித்துவிட்டது. ஆம்புலன்ஸில் இருந்தவர்களிடம், சார் என்ன கொன்னுடுவீங்களா... என்று கேட்டாராம். நெல்லையிலிருந்து சென்னை வரும்வரை ராம்குமார் அச்சத்துடனேயே பயணித்திருக்கிறார்.
சென்னையில் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ராம்குமார் உள்நோயாளியாகச் சேர்க்கப்பட்டார். ராம்குமாருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அறித்து உத்தரவிட்டுள்ளார் நீதிபதி. மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்த பிறகு புழல் சிறையில் அடைக்கப்படுவார்.
தற்கொலை வழக்குப் பதிவு
ராம்குமார் மீது செங்கோட்டை காவல் நிலையத்திலும் இரண்டாவதாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தன்னைத் தானே பிளேடால் கீறி தற்கொலைக்கு முயற்சி செய்தார் என்ற தற்கொலை முயற்சி வழக்கைப் பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் ராம்குமார் மீண்டும் கைது செய்யப்படுவார்.
பாளை சிறையில் ராம்குமார்
ராம்குமாரை புழல் சிறைக்கு மாற்றிய பிறகு, செங்கோட்டையில் பதிவு செய்யப்பட்ட வழக்குக்காக அவரை நெல்லைக்கு அழைத்து செல்வார்கள். அங்கே விசாரணை நடத்தி அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைப்பார்கள் என்று சொல்கிறார்கள்.
கண்ணீர் விட்டு கதறல்
சுவாதி கொலை பற்றி யார் விசாரித்தாலும் பேசி முடித்ததும் கடைசியில் ராம்குமார், சார் எனக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடுங்க. ஆனா, இந்த ஊரு வேணாம். இங்கே இருந்து வேற எங்காவது என்னை மாத்திடுங்க. சென்னை எனக்கு வேணாம்.
இங்கே இருக்க எனக்கு பிடிக்கலை... என்று அழுகிறாராம். அவளும் அப்படி செஞ்சிருக்கக்கூடாது... நானும் அவளை வெட்டியிருக்கக்கூடாது என்றும் கண்ணீருடன் சொல்கிறாராம் ராம்குமார்.