சுவாதி கொலையாளி யார் எனத் தெரியும்... விரைவில் அறிவிப்பேன்: ராம்குமார் வக்கீல் பரபரப்பு பேட்டி
சென்னை: சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளதாகவும், விரைவில் கொலையாளியை அறிவிப்பேன் என்றும் ராம்குமார் வழக்கறிஞர் ராமராஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 24ம் தேதி சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் வைத்து கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி. இந்தக் கொலை தொடர்பாக நெல்லை மாவட்டம், செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரைக் கைது செய்த போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
ஏற்கனவே, ராம்குமாரை 3 நாட்கள் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். தற்போது மேலும் ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட் அனுமதி அளித்துள்ளது.
ரத்தமாதிரி...
இந்த சூழ்நிலையில், நேற்று சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ரகசியமாக அழைத்து வரப்பட்டார் ராம்குமார். அங்கு அவருக்கு தொண்டை காயத்திற்கான சிகிச்சை அளிக்கப்பட்டது. கூடவே, ராம்குமாரின் ரத்தமாதிரியும் சேகரிக்கப்பட்டது.
காரணம்...
சுவாதியை வெட்டப் பயன்படுத்திய அரிவாளில் இரண்டு பேரின் ரத்தம் இருப்பதாகவும், அதில் ஒன்று சுவாதி உடையது, எனவே மற்றொன்று ராம்குமாருடையதா என்பதை அறிய இந்தச் சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
யார் கொலையாளி...
மருத்துவமனையில் இருந்து மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமாரை அவரது வழக்கறிஞர் ராமராஜ் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "சுவாதியை கொலை செய்தது யார் என்பது குறித்து தெரியவந்துள்ளது. விரைவில் கொலையாளியை அறிவிப்பேன்.
சிபிஐ விசாரணை...
ராம்குமாரிடம் காவல்துறையினர் இன்று ரத்த மாதிரி சேகரித்தது சட்டத்திற்கு புறம்பானது. ராம்குமாரை குற்றவாளியாக்க ஒரே கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடக்கிறது. சுவாதி குறித்து காவல்துறையினர் முழுமையாக விசாரிக்கவில்லை. இந்த கொலை வழக்கில் சிபிஐ விசாரணை கேட்டு, வரும் 3ம் தேதியன்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய உள்ளேன்" எனத் தெரிவித்தார்.