ராம்குமார் தற்கொலை... நீதி விசாரணை கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்
சென்னை: சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த ராம்குமார் சிறையில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி சிபிஎம் கட்சியினர் ராயப்பேட்டை மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மிக முக்கிய வழக்கான சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் நேற்று மின் கம்பியை வாயில் கடித்து தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசாரால் கூறப்பட்டது. உயிரிழந்த ராம்குமாரின் உடல் சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, ராம்குமாரின் தற்கொலையில் மர்மம் உள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விசிக தலைவர் தொல் திருமாவளவன், சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனைத்தையும் சந்தேகத்தையும் எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில், ராம்குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள ராயப்பேட்டை மருத்துவமனை முன் சிபிஎம் கட்சியினர் ஒன்று கூடி ஆர்ப்பாட்டாத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ராம்குமாரின் தற்கொலைக்கு உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.