சென்னையில் மட்டுமல்ல.. ராணிப்பேட்டையிலும் தடதடத்த தவெக.. மாணவிகளிடம் சென்ற விஜய் கடித நகல்
ராணிப்பேட்டை: அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வழக்கு தமிழ்நாட்டில் விஷ்வரூபம் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளின் போராட்டம் வலுத்து வருகிறது. சென்னையில் விஜய் எழுதிய கடிதம் நகலை தவெகவினர் பெண்களுக்கு விநியோகம் செய்து கைது நடவடிக்கை பாய்ந்துள்ளது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தவெகவினர் மாணவிகளுக்கு விஜய்யின் கடித நகலை விநியோகம் செய்துள்ளனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு நாடு முழுவதும் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சென்னை கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திமுக அமைச்சர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளியானதால் அரசியல் வட்டாரத்திலும் இது பரபரப்பை கிளப்பியது.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தனிப்பட்ட விவரங்களுடன் கூடிய எப்ஐஆர் பொது வெளியில் கசிந்து சர்ச்சையை ஏற்படுத்தியது. சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது. அதில் காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிமன்றம், பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் விசாரணைக் குழு அமைத்தும், மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு தரச்சொல்லியும் உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தன்னை தானே சாட்டையால் அடித்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டார். அதிமுகவினர் யார் அந்த சார் என்று இந்த வழக்கின் பின்னணியில் உள்ளவர்களையும் விசாரிக்க சொல்லி இன்று மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டது.
இந்த விவகாரத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் போராட்ட களத்தில் குதித்துள்ளது. இன்று காலை தவெக தலைவர் விஜய், உங்கள் அண்ணனாக எப்போதும் நான் உடனிருப்பேன் என்று மகளிருக்கு கடிதம் எழுதினார். அதில் திமுக அரசையும் விஜய் கண்டித்திருந்தார். இதையடுத்து மதியம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என் ரவியை விஜய் சந்தித்து பேசினார்.
தொடர்ந்து விஜய் எழுதிய கடிதத்தின் நகலை சென்னை தி.நகர் பகுதியில் தவெக மகளிரணியினர் பெண்களிடம் விநியோகம் செய்தனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மகளிர் நிர்வாகிகளை பார்ப்பதற்காக தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றார். அப்போது அவரும் கைது செய்யப்பட்டார்.

இது தவெகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதேபோல ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தவெக மகளிரணியினர் விஜய் கடிதம் நகலை பெண்களுக்கு விநியோகம் செய்தனர். ராணிப்பேட்டை மகளிர் கலை அறிவியல் கல்லூரி முன்பு திரண்ட 25க்கும் மேற்பட்ட தவெக மகளிரணி நிர்வாகிகள், காலை விஜய் எழுதிய கடிதத்தின் நகலை மாணவிகளிடம் விநியோகம் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதேபோல கோவை சிங்காநல்லூர் பேருந்து நிலையம் அருகிலும் தவெகவினர் கடித நகலை பெண்களுக்கு விநியோகம் செய்து வருகிறார்கள். மாநிலம் முழுவதுமே ஒரே நேரத்தில் கடித நகலை விநியோகம் செய்து வருகிறார்கள். மேலும் காவல்துறையின் கைது நடவடிக்கையை கண்டித்தும் தவெகவினர் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications