வேலூர் டூ ராணிப்பேட்டை.. எங்கே திரும்பினாலும் "இவங்களேதான்".. ஒளிரும் பெண்மை - மிளிரும் தாய்மை.. செம
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் என்ன நடக்கிறது? ஒட்டுமொத்த மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான அதிரடிகள்தான் இந்த மாவட்டங்களில் நடந்து கொண்டிருக்கிறது.
சமீபகாலமாகவே வடமாவட்டத்தை கலக்கி கொண்டிருக்கிறார்கள் பெண் அதிகாரிகள்.. கோவை மாவட்டத்திலும் நிறைய பெண் அதிகாரிகள் பொறுப்பில் உள்ளனர்.

கோவை: கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, போலீஸ் உயர் பதவிகளில், கடந்த சில வருடங்களாகவே ஆண்களே ஆக்கிரமித்திருந்த நிலையில், உயர் பதவிகளில் பெண்களும் அதிகமாகவே அலங்கரிக்க துவங்கிவிட்டனர்.
குறிப்பாக கடந்த 2 வருடங்களுக்கு முன்பு, கருமத்தம்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு தையல் நாயகி, பயிற்சி ஏ.எஸ்.பி கரீமா, பொள்ளாச்சி சப்-டிவிசனில் பணியாற்றும் பிருந்தா என போலீஸ் ஸ்டேஷன்களில் இன்ஸ்பெக்டர்களாக பணியில் சேர்ந்தது, கோவை மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஈரோடு: அதேபோல மேற்கு மண்டலத்தின் ஐ.ஜியாக, பவானிஸ்வரி ஐபிஎஸ் அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல் போன்ற பகுதிகளை உள்ளடக்கியதுதான் கோவை மேற்குமண்டலம்.. இதற்கெல்லாம் சேர்த்து ஐஜியாக ஒரு பெண் பதவி வகிப்பது என்பது லேசுப்பட்ட விஷயமில்லை.
இதுபோலவே, இப்போது வடமாவட்டங்களையும் சொல்லலாம்.. குறிப்பாக, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கலெக்டர்கள், எஸ்பி, மேயர், கமிஷனர் என்று ஒட்டுமொத்தமாக பெண் அதிகாரிகள் தற்போது ஆட்சி செய்ய துவங்கிவிட்டார்கள்.
தமிழக அரசு: பெண்களை ஊக்குவிக்கவும், உற்சாகப்படுத்தும் விதமாகவும் கல்வி, தொழில், அரசியல் என்று அனைத்திலும் சம உரிமை வழங்கி அழகு பார்த்து வருகிறது தமிழக அரசு..
வேலூர் மாவட்டத்தில் கலெக்டர் சுப்புலட்சுமி, DRO மாலதி, ஆர்டிஓக்கள் கவிதா, சுபலட்சுமி, திட்ட இயக்குனர் ஆர்த்தி, மேயர் சுஜாதா, கமிஷனர் ஜானகி, துணை கமிஷனர் சசிகலா, உதவி கமிஷனர் ஜெபக்கிறிஷ்டோபர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி என்று அனைத்து துறைகளிலும் பெண்கள் நீக்கமற நிறைந்து, திறம்பட செயல்புரிந்து, மாவட்டத்தையே முன்னேற்ற பாதைக்கு இட்டுச்சென்று வருகிறார்கள்.
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில், கலெக்டர் சந்திரகலா, எஸ்பி கிரண்ஸ்ருதி, ஆர்டிஓ பாத்திமா, திட்ட இயக்குனர் லோகநாயகி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, நகராட்சி தலைவிகள் சுஜாதா (ராணிப்பேட்டை), ஹரிணி (வாலாஜா), தமிழ்செல்வி (சோளிங்கர்), தேவி (ஆற்காடு), லட்சுமி (அரக்கோணம்) என்று ராணிப்பேட்டை மாவட்டத்தை பெண் அதிகாரிகள் ஆட்சியை நடத்தி கொண்டிருக்கிறார்கள்.
அதாவது, சுருக்கமாக சொல்லப்போனால், வேலூர், ராணிப்பேட்டை இந்த 2 மாவட்டங்களிலுமே 90 சதவீதம் பெண்கள் ஆட்சி செய்து வருகின்றனர்.. இவர்கள் தற்போது மேற்கொண்டிருக்கும் ஒவ்வொரு பதவிகளும் மிகப்பெரிய பொறுப்புகள் நிறைந்தவை. இவையெல்லாம் சவால்கள் நிறைந்த பணிகளும்கூட.
ராயல் சல்யூட்: இப்படிப்பட்ட ஆட்சி அதிகாரத்தில் பெண் அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளது, அந்தந்த மாவட்ட மக்களுக்கு பெருமையையும், தைரியத்தையும், தன்னம்பிக்கையும், உத்வேகத்தையும், மகிழ்ச்சியையும் தந்து கொண்டிருக்கின்றன.. இந்த தேசத்தையே தொடர்ந்து தமிழகத்தின் பக்கம் திரும்பி பார்க்க வைத்து வரும், பெண் அதிகாரிகளுக்கு, ஒரு ராயல் சல்யூட்.. !!












Click it and Unblock the Notifications