திருச்சி : முன்னாள் துணைமேயர் ஆஷிக் மீரா மீது பலாத்கார வழக்கு: விரைவில் கைது?
திருச்சி: திருச்சி முன்னாள் துணை மேயர் ஆசிக் மீரா மீது பாலியல் பலாத்காரம், கருக்கலைப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருச்சி சங்கிலியாண்டபுரம் மணல்வாரிதுறை சாலை பகுதியில் வசிப்பவர் துர்கேஸ்வரி. முன்னாள் ராணுவ அதிகாரியின் மகளான இவர், திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் மகளிர் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
ஆஷிக்மீரா மீது புகார்
அதில், கடந்த ஒன்றரை வருடமாக, தன்னை முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் மகனும், திருச்சி துணை மேயருமான ஆசிக் மீரா, காதலித்து, பெயரளவில் திருமணம் செய்து, தன்னோடு வாழ்ந்ததாகவும், அதில் மூன்று முறை கருவுற்றதாகவும், இரண்டு முறை வற்புறுத்தி கருவை கலைத்ததாகவும், தற்போது தான் மீண்டும் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அவர், மீண்டும் கருவை கலைக்கச் சொல்லி மிரட்டுவதாகவும், எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
கொலைமிரட்டல் விடுத்த ஆஷிக்
இந்நிலையில், தற்போது தனக்கு பெண் குழந்தை பிறந்த பிறகும், துணை மேயர் ஆசிக் மீரா தன்னையும், தன் குழந்தையையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், எனவே, தன்னையும், தன் குழந்தையையும் காப்பாற்றக்கோரி திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் மற்றும் பொன்மலை மகளிர் காவல்நிலையம் உள்ளிட்டவற்றுக்கு புகார் கொடுத்தார்.
காவல்துறை அலைக்கழிப்பு
ஆனால், அந்த புகாரை வாங்காமல், துர்காவை காவல்துறையினர் அலைக்கழித்தனர். இதையடுத்து, நீதி கேட்டு முதல்வர் தனிப்பிரிவுக்கு துர்கா மனு அனுப்பினார். அடுத்து தன்னை ஏமாற்றிய துணை மேயர் ஆசிக் மீரா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த 14ஆம் தேதி பொன்மலை மகளிர் காவல்நிலையத்தில் துர்கா மீண்டும் புகார் கொடுத்தார்.
ஆஷிக் மீரா ராஜினாமா
காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததால், ஆசிக் மீரா மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி காவல் நிலையத்திற்குள்ளேயே உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி துணை மேயரான ஆசிக் மீரா, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
பலாத்கார வழக்குப் பதிவு
இந்நிலையில், ஆசிக் மீரா மீது பாலியல் பலாத்காரம், முறையற்ற திருமணம், கருக்கலைப்பு, கொலை மிரட்டல், அனுமதி இன்றி உறவு வைத்தல் என 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, தலைமறைவாக உள்ள ஆசிக் மீராவை, முதல்வர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வரவுள்ள 30ஆம் தேதிக்குள் கைது செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ள போலீசார், ஆஷிக்மீராவை தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். போலீஸ் வைத்த பொறியில் சிக்குவாரா ஆஷிக்மீரா?.