மேகமூட்டம் காரணமாக காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரியஒளி விழவில்லை... மக்கள் ஏமாற்றம்
கன்னியாகுமரி: மேகமூட்டம் காரணமாக காந்தி ஜெயந்தி தினத்தையொட்டி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் விழும் அபூர்வ சூரிய ஒளி இன்று விழவில்லை. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
காந்தியடிகளின் அஸ்தி கன்னியாகுமரி கடலில் கரைக்க கொண்டு வந்த போது, அதற்கு கன்னியாகுமரி கடற்கரையில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு சார்பில் அங்கு நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது.

அந்த மண்டபம் கட்டப்பட்ட போதே, மகாத்மாவின் பிறந்த தினமான அக்டோபர் இரண்டாம் தேதி, அஸ்திபீடத்தில் சூரிய ஒளி விழும் வகையில் வடிவமைக்கப் பட்டது. அதன்படி, ஆண்டுதோறும் அக்டோபர் 2ம் தேதி பகல் 12 மணிக்கு இந்த சூரிய ஒளி அஸ்திகலசத்தில் விழும்.
இந்நிலையில், தேசப்பிதா மகாத்மா காந்தி அவர்களின் 146வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி அஸ்திபீடத்தில் விழும் அபூர்வ சூரிய ஒளியைக் காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காந்தி மண்டபத்தில் குவிந்திருந்தனர்.
பகல் 12 மணியளவில் சூரிய ஒளி அஸ்தி பீடத்தில் விழும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காலை முதலே அப்பகுதியில் லேசான மழைத் தூறலுடன் மேகமூட்டமாகக் காணப்பட்டது. அஸ்தி பீடத்தில் சூரிய ஒளி விழவில்லை. இதனால் அபூர்வ சூரிய ஒளியைக் காண அங்கு குவிந்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
வழக்கமாக சூரிய ஒளி அஸ்தி பீடத்தில் விழும் போது, அதற்கு அரசு சார்பில் கலெக்டர் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது வழக்கம்.












Click it and Unblock the Notifications