விண்ணப்பித்த இரண்டே மாதங்களில் ரேஷன்கார்டு: அமைச்சர் காமராஜ் உறுதி
சென்னை: ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்த அனைவருக்கும் 2 மாதத்தில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது என தமிழக சட்டசபையில் அமைச்சர் உணவு வழங்கல் துறை காமராஜ் தெரிவித்தார்.
சட்டசபையின் கேள்வி நேரத்தில் பதிலளித்து காமராஜ் கூறியதாவது: புதிய ரேஷன் கார்டு கேட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்பவர்கள் அனைவருக்கும் 2 மாதங்களுக்குள் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், ஒரே குடும்பத்தில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்டோர் புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். எனவே, தகுந்த ஆய்வு செய்த பிறகு, தகுதி இருந்தால் மட்டுமே ரேஷன் கார்டு வழங்கப்படும்.
ரேஷன் கார்டு தொடர்பான குறைகளை தீர்ப்பதற்காக சென்னை மாவட்டத்தில் மாதத்தின் 2வது சனிக்கிழமைகளிலும், மற்ற மாவட்டங்களில் மாதத்தின் 2வது வெள்ளிக்கிழமைகளிலும் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அவர்கள் அளிக்கும் மனுக்கள் குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் தீர்வு செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.