கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசி அதிரடி பறிமுதல்
நெல்லை: கேரளாவுக்கு கடத்த முயன்ற 2 டன் ரேசன் அரிசியை கூடங்குளம் அருகே அதிரடியாக போலீசார் கைப்பற்றினர்.
நெல்லையில் உள்ள உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிழக்கு கடற்கரை சாலையில் ரேசன் அரிசி கடத்தல் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் சாமிநாதன் தலைமையிலான போலீசார் இடிந்தகரை கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது நாகர்கோவில் நோக்கி சென்ற ஒரு மினி லாரியை சந்தேகத்தோடு பிடித்து சோதனை நடத்தினர். அதில் மீன் கூடைகளுக்கு கீழே மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 2 ஆயிரம் கிலோ அளவிலான ரேசன் அரிசியை போலீசார் கைப்பற்றினர். மேலும் மினி லாரியையும் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி மினி லாரியின் டிரைவரான நாகர்கோவிலை சேர்ந்த மோகன்ராஜ், ராமசந்திரன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து, அவர்களை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.