சசிகலா குடும்பம் பற்றி ஜெ., சொன்னது என்ன? சிடி வெளியிட்ட ஆர்.பி உதயகுமார்
ஜெயலலிதாவினால் ஒதுக்கி வைக்கப்பட்ட குடும்பத்தினர் இன்றைக்கு கட்சியை கைப்பற்ற நினைப்பதாக அமைச்சர் உதயகுமார் குற்றம் சாட்டினார்.
சென்னை: சசிகலாவை பற்றி ஜெயலலிதா பேசியவைகளை இன்று சிடியாக வெளியிட்டுள்ளார் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்.
சென்னையில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது சிலரது சுயநலத்திற்காக அதிமுக பலியிடப்படக்கூடாது என்றார்.
தொண்டர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி சகோதர யுத்தத்தை உருவாக்க சிலர் முயல்கின்றனர் என்றும் குற்றம் சாட்டினார்.
எடப்பாடி பழனிசாமி மீது மறைந்த முதல்வர் ஜெயலலிதா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தார். ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள் தற்போது கட்சி, அட்சியைக் கைப்பற்ற நினைப்பதாகவும் உதயகுமார் கூறினார்.
எடப்பாடி பற்றி ஜெ. சொன்னதென்ன?
ஜெயலலிதா தலைமை தாங்கி நடத்திய திருமண விழாவில் இன்றைய முதல்வர் எடப்பாடி அவர்கள் 1974ம் ஆண்டில் இருந்து கிளை கழக செயலாளர் பொறுப்பில் இருந்து படிப்படியாக உயர்ந்திருக்கும் குறுந்தகடு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டு தலைமுறை அதிமுகவினர்
தற்போது நானும், சகோதரர் மணிமாறன் அவர்களும் இரண்டு தலைமுறையாக அதிமுகவில் என் தந்தையாரும், நானும் தொடர்ந்து பணியாற்றி வருகின்றோம். அந்த உரிமையில் கேட்டுக்கொள்கிறேன். அதிமுக சிலரின் சுயநலத்திற்காக பலிகொடுக்க கூடாது,
சிடி வெளியீடு
தொண்டர்கள் முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும், மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிற அடிப்படையில் தான் 2 சிடிகளும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சிடியில் எல்லாம் இருக்கிறது இதை கேட்டு தொண்டர்கள் உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.
சசிகலா பற்றி சொன்னதென்ன?
45 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிற முதல்வரின் விசுவாசம் என்ன என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். இன்றைக்கு இந்த கட்சியும், ஆட்சியும் கைப்பற்ற நினைக்கும் குடும்பத்தின் நிலை என்ன? ஜெயலலிதா அவர்கள் அவர்களுக்கு என்ன நிலையை கொடுத்திருந்தார்கள் என்பதையும் இன்றைக்கு வெளியிடப்பட்டிருக்கும் குறுந்தகடில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
சகோதர யுத்தம்
ஏற்கனவே இந்த செய்திகள் எல்லாம் அனைத்து பத்திரிக்கைகளிலும் செய்தியாக வந்திருக்கிறது. எனவே இன்றைக்கு இல்லாத ஒன்றை சொல்கிறார்கள், தொண்டர்களை குழப்புகிறார்கள், தொண்டர்களிடத்தில் பதவி ஆசையை ஏற்படுத்தி சகோதர யுத்தத்திற்கு வழிவகுக்கிற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.
தொண்டர்களின் இயக்கம்
இவையெல்லாம் நாட்டு மக்கள் தெரிந்துகொள்ள வேண்டும், ஒருவரின் சுயநலத்திற்காக மக்கள் எண்ணி நகையாடும் நிலைமையில் உள்ளது. இந்தியாவின் 3வது பெரும் இயக்கமாக அதிமுகவை உருவாக்கினார்கள். 1.50 கோடி தொண்டர்கள் இயக்கமாக இதை உருவாக்கி காட்டினார் ஜெயலலிதா அவர்கள்.
அரசை குற்றம் சாட்டும் ஜெயாடிவி
ஜெயா டிவி மற்றும் டாக்டர் நமது எம்.ஜி.ஆர் என்பது அதிமுக வளர்ச்சிக்காகவும், கொள்ககைளை மக்களுக்கு எடுத்துச் சொல்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. அந்த கொள்கையில் இருந்து மாறி அம்மாவின் அரசை குற்றம் சாட்டுகின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்கள்.