ஜெ. மரணம்.. எந்த விசாரணைக்கும் ரெடி -அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி
ஜெயலலிதா மரணம் தொடர்பான எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாக அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சையில் யாரும் தலையிடவில்லை என்றும், வழங்கப்பட்ட சிகிச்சையில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார். இது தொடர்பாக எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், ஜெயலலிதா மரணம் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.
இதனிடையே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைத்தால் தாம் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாக அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டி கூறியுள்ளார்.
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த பிரதாப் ரெட்டி செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்தபோது இதனை கூறினார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் போது யாரும் தலையிடவில்லை என்று கூறிய அவர், சிகிச்சை அளித்ததில் எந்த தவறும் ஏற்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த போது பலமுறை செய்தியாளர்களை சந்தித்த பிரதாப் ரெட்டி, நலமோடு இருப்பதாகவும், ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என்றும் கூறி வந்தார். திடீரென இதய முடக்கம் ஏற்பட்டு ஜெயலலிதா மரணமடைந்து விட்டதாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் டிசம்பர் 5ஆம் தேதி அறிவித்தது.
ஜெயலலிதா மரணமடைந்து 7 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அவரது மரணம் பற்றிய சந்தேகங்கள் பலராலும் எழுப்பப்படுகிறது. இதற்கான விடை எப்போது கிடைக்கும் என்பது உண்மையான அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.