"இந்து முஸ்லிம் சீக்கி சாகி ஆபஷ் பேகே பாயி பாயி" பாட்டுப் பாடிய கருணாநிதி
இந்தக் கூட்டத்தின் முக்கியமான நோக்கம் அண்மையிலே நாமெல்லாம் சந்திக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியினுடைய அங்கமாக விளங்குகின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வேட்பாளர்கள் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், இரா. கிரிராஜன் ஆகிய நம்முடைய தம்பிமார்களை எல்லாம் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது தான் நம்முடைய குறிக்கோளாகும். ஏதோ மூன்று பேர், நான்கு பேர் வெற்றி பெற்று விட்டால் அது தான் தி.மு. கழகத்தின் இறுதி இலட்சியம் என்று யாரும் கருத வேண்டாம். நாம் ஆற்ற வேண்டிய கடமைகளில் ஒன்று, நாம் கடந்து செல்ல வேண்டிய படிக்கட்டுகளில் ஒன்று, காட்டாறுகளில் ஒன்று, இன்றைக்கு தமிழகத்தைச் சுற்றி நம்மையெல்லாம் சோதனைக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கின்ற நிலையிலே இருப்பதை அனைவரும் அறிவீர்கள்.
இந்தச் சோதனைகளைக் கடந்து வேதனைகளைக் கடந்து சாதனை புரிபவர்களாக நாம் விளங்க வேண்டும் என்பதற்காகத்தான்தி.மு. கழகத்தின் சார்பில் அதன் தலைவராகிய நான் உங்களை எல்லாம் சந்திக்கின்றேன்.
ஏதோ இறுமாப்போடு சொல்லவில்லை, நான் தி.மு. கழத்தின் தலைவன், உங்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன், தொண்டர்களைச் சந்திக்க வந்திருக்கின்றேன் என்ற இறுமாப்போடு பேச நான் ஒன்றும், தமிழகத்தின் முதலமைச்சர் ஜெயலலிதா அல்ல;
இறுமாப்பு பேசுவதையோ, அல்லது யாருக்கும் அஞ்ச மாட்டேன் என்ற அந்தக் குரலையோ நீங்கள் என்னிடத்திலே என்றைக்கும் காண முடியாது. பணிவோடு, கனிவோடு வாழ்ந்து கொண்டிருக்கின்ற நான் - தமிழ் மக்களுடைய இதயத்தை புரிந்து கொண்டிருக்கின்ற நான் அவர்களுக்கு இடையே நல்லுறவு ஏற்பட வேண்டும். அவர்கள் யாராக இருந்தாலும், "இந்து முஸ்லீம் சீக்கி சாகி"என்று சொல்லப்படுகின்ற இந்த வர்க்கத்தில் இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக இருந்தாலும், சீக்கியர்களாக இருந்தாலும், கிறித்துவர்களாக இருந்தாலும் என்லோரும் நம்முடைய தோழர்கள் தான். இதைத்தான் அன்றைக்கே ஒரு பாடலிலே மெய்ப்படுத்திருக்கிறார்கள்.
"இந்து முஸ்லிம் சீக்கி சாகி
ஆபஷ் பேகே பாயி பாயி"
பாயி கோ கா பாயி பேரா
ஐ சா கை சா கலங்க மாறா"
என்று அன்றைக்கே பழம் பெரும் பாடல் - காங்கிரஸ் இயக்கத்தின் தலைவர்களால், கவிஞர்களால் எடுத்து உரைக்கப்பட்ட பாடல்; அது நமது சகோதரத்துவத்தை தமிழகத்திலே மாத்திரமல்ல, இந்தியா முழுவதும் பரப்ப வேண்டும்; நாம் சகோதர்களாக வாழ வேண்டும்; நாம் உடன் பிறப்புக்களாக ஒளிவிட வேண்டும் என்ற அந்தக் கருத்தை எதிரொலிக்கின்ற அந்தப் பாடலைத்தான் நான் இப்போது உங்களுக்கு நினைவு படுத்திய பாடல் ஆகும்.