மதச்சார்பற்ற நிலைக்கு திரும்பினால் காங்கிரசுக்கு ஆதரவு: கருணாநிதி திடீர் பேச்சு
சென்னை: "காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி நாங்கள் மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், மத வெறியர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால் போனால் போகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை ஆதரிக்கும். .நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், நன்றி மறந்தவர்கள் என்று அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நன்றி மறந்தவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் மன்னிக்காது என்றும் திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

சென்னையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசிய பேச்சின் முழு விவரம்:
சென்னையில் திராவிட இயக்கத்தினுடைய கூட்டம்; அது தந்தை பெரியாருடைய கூட்டமாக இருந்தாலும், அவரால் உருவாக்கப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்களுடைய கூட்டமாக இருந்தாலும், அந்த அண்ணாவினால் உருவாக்கப்பட்ட நாங்கள் கலந்து கொள்கின்ற கூட்டங்களாக இருந்தாலும் எங்கே அந்தக் கூட்டத்தை நடத்தலாம் என்று மாவட்டக் கழகத்தின் செயல்வீரர்களிடம் கலந்து ஆலோசிக்கும் போது, எங்களுக்கு முதலிலே நினைவுக்கு வருகின்ற இடம் இந்த சிந்தாதிரிப்பேட்டை தான்.
சிந்தாதிரிப்பேட்டையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் நடைபெறுகின்றது என்றால், தமிழ் மக்கள் இங்கே சிந்தாமல் சிதறாமல் சீரியக் கருத்துக்களை எடுத்துச் சொல்லக் கூடிய தமிழறிஞர்கள், தமிழ்ச்சான்றோர், தமிழ்விரும்பிகள், நம்மையெல்லாம் பார்த்துக் களித்து, நம்முடைய முன்னேற்றத்திற்கான வழிவகைகளை, நம்முடைய மொழியின் வளர்ச்சிக்கான வழிகளை எடுத்துக் கூறுவார்கள் என்ற நிறைந்த நம்பிக்கையோடு, இந்த இடத்திலே வரும் கூட்டங்களுக்கு பெருவாரியாக கூடியது உண்டு. அது தான் இன்றைக்கும் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
சிந்தாதிரிப்பேட்டையிலே திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கூட்டம் என்றால் இந்த உணர்வு இன்று நேற்றல்ல, நீண்ட நெடுங்காலமாக நம்முடைய உள்ளத்திலே பதிந்த ஒன்றாகும். இங்கே தான் அறிஞர் அண்ணா அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வளர்ச்சிக்காக, எழுச்சிக்காக நம்மையெல்லாம் அவருடைய அழகு தமிழின் மூலமாக தயார் படுத்தினார். அவர் வழி நின்று, இன்றைக்கு ஒரு மதச்சார்பற்ற ஒரு அரசு, மதவெறியில்லாத ஒரு இயக்கம் காண வேண்டும் என்ற துடிப்போடு நாங்கள் அவர் வழி நின்று நடத்தி வருகின்ற இந்த இயக்கத்திற்குப் பெயர்தான் திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும்.
திராவிட முன்னேற்றக் கழகம் - "தி.மு.க." என்ற மூன்று எழுத்துக்களைக் கொண்டது என்றாலும், இந்த தி.மு.க., திராவிடர்களை ஒன்று படுத்தி அவர்களுடைய முன்னேற்றத்திற்காக உழைத்து கண்ணியத்தோடு நடைபெறுகின்ற ஒரு இயக்கம் என்பதை தி. மு. க. என்ற இந்த மூன்று எழுத்துக்களும் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன.
அப்படிப் பட்ட பெருமைக்குரிய, பெயரைக் கொண்ட, இந்த இயக்கத்தின் சார்பில் சிந்தாதிரிப்பேட்டையிலே கூட்டம் நடைபெறுகின்றது என்றால் சென்னையைத் தெரிந்து கொண்டவர்களுக்கு, அரசியலில் அரிச்சுவடி படித்தவர்களுக்குக் கூட அது ஒரு அவசியக் கூட்டமாகத்தான் இருக்கும். அங்கே பேசப்படுகின்ற அரசியல் தமிழ் நாட்டின் மேன்மைக்கு பயன்படுகின்ற அரசியலாக அமையும். தமிழ் நாட்டில் இருக்கின்ற மக்களை ஒன்றுபடுத்துகின்ற, சாதி பேதமற்ற, மதபேதமற்ற, மதவெறி அல்லாத ஒரு அமைதியை விரும்புகின்ற இயக்கத்தின் கூட்டமாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் நீண்ட நெடுங்காலமாக உண்டு.
ஒன்றைச் சொல்ல விரும்புகின்றேன், இந்த சிந்தாதிரிப்பேட்டையிலே தான் இந்தியாவில் ஒரு பெரிய புரட்சியை இஸ்லாமிய மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு ஒரு தொல்லையைத் தந்து, பாபர் மசூதியை இடித்து நொறுக்கி அந்த சம்பவத்தை திருவிழாவாகக் கொண்டாடிய மத வெறியர்களுக்கு கண்டனம் தெரிவிக்கின்ற கூட்டம் நடைபெற்ற இடம், தமிழகத்திலே இந்த சிந்தாதிரிப்பேட்டைதான். அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டவன் அடியேன் தான்.
அந்தக் கூட்டத்திலே கலந்து கொண்டு நான் விடுத்த அறைகூவல், என் சார்பில் விடுக்கப்பட்ட அறைகூவல், இவற்றையெல்லாம் இந்த வட்டாரத்திலே வாழ்கின்ற மக்களாகிய நீங்கள் மறந்திருக்க முடியாது, அப்படிப்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில், திராவிட இயக்கத்தினுடைய அரும் பெரும் கொள்கைகளில் ஒன்றான சமத்துவத்தை மதவெறி கூடாது என்ற தத்துவத்தை எடுத்துச் சொல்கின்ற ஒரு கூட்டமாக இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டம் இங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications