நன்றி மறந்தால் மகனாக இருந்தாலும் மன்னிப்பு இல்லை- கருணாநிதி
திராவிட முன்னேற்றக் கழகம் நன்றி மறந்தவர்கள் யாராக இருந்தாலும், நன்றி மறந்தவர்கள் என்று அண்ணனாக இருந்தாலும், தம்பியாக இருந்தாலும், மனைவியாக இருந்தாலும், மகனாக இருந்தாலும் யாராக இருந்தாலும் நன்றி மறந்தவர்களை திராவிட முன்னேற்றக் கழகம் மன்னிக்காது,
அவர்களுடைய தவறுகளை மறவாது. என்னைப் பொறுத்தவரையில் எனக்குக் கொள்கை தான் முக்கியம், குழந்தை குட்டிகள் அல்ல.
நான் அரசியலுக்கு வந்து ஏறத்தாழ 70 ஆண்டுகள் கடந்து விட்டன. இப்போது எனக்கு வயது 90 என்றால், இன்னும் எத்தனை ஆண்டுக் காலம் வாழப் போகிறேன் என்று கவலை இல்லை. ஆனால் மிச்சம் இருக்கின்ற இந்த ஆண்டுகளில் தமிழர்களுக்கு நான் என்ன செய்தேன், தமிழ் மக்களுக்கு நான் என்ன செய்தேன் என்பது தான் முக்கியம். அதைச் செய்து விட்டுத் தான் நான் கண் மூடுவேன். அதுவரையிலே காரியம் ஆற்றுவேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா அவர்கள் கட்டிக்காத்த கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, சுயமரியாதை தன்மை இவைகளுக்காக வாழ்வேன் என்பதை மாத்திரம் எடுத்துச் சொல்லி, அத்தகைய பெரிய தலைவர்கள் வழி வந்த நான், அவர்களுடைய கொள்கைகளை பின்பற்றி உங்களுடைய அன்பைப் பெற்ற நான், மேலும் தொடர்ந்து வாழ நீங்கள் வழி காட்டுவீர்கள் என்ற நம்பிக்கையோடு, இந்த அரிய கூட்டத்தில், பெரிய கூட்டத்தில், அருமையான நிகழ்ச்சியில் வேட்பாளர்களான தம்பிகள் தயாநிதி மாறன், டி.கே.எஸ். இளங்கோவன், இரா. கிரிராஜன் ஆகியோருக்கும், மற்ற தொகுதிகளில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் உரிய சின்னங்களில் உங்களுடைய அன்பான வாக்குகளை வழங்கி அவர்களையெல்லாம் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டு,
உங்களுடைய வாக்குத் தான் தமிழகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடியது, காப்பாற்றக் கூடியது, திராவிடத்தை நல்ல முறையிலே திகழ வைக்கக் கூடியது என்பதை எடுத்துச் சொல்லி மறவாதீர் இந்தத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தை என்று எடுத்துக் கூறி, உதய சூரியன், உங்கள் சூரியன், உதய சூரியன் உங்கள் சின்னம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.