திமுகவை பழிவாங்கிய காங்கிரஸ்.. மனம் வருந்தினால் பொதுமன்னிப்புடன் ஆதரவு
நான் சொல்ல விரும்புகிறேன் தோழர்களே, திராவிட பெருங்குடி மக்களே, முற்றும் உணர்ந்த கற்றறிவாளர்களே, உங்களுக்கு நான் சொல்ல விரும்புகின்றேன்; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் பத்திரிகைகள் எப்படி இருந்தன. எப்படி நடத்தப்பட்டன? இன்றைக்கு எந்த அளவிற்கு பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டிருக்கிறது என்பதை பத்திரிகைகாரர்களே தெரிந்து கொண்டால் போதும்.
ஆனால் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே எங்கே ஊழல் தென்பட்டாலும், எங்கே தவறுகள் தோன்றினாலும், அவற்றையெல்லாம் தவிர்க்கவும், அந்த ஊழல்களை கண்டிக்கவும், நான் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் சாதாரணமானவைகள் அல்ல.
ஆனால் இன்றைய தினம், எங்களைப் பற்றி சொன்னார்கள்! அருமைத் தம்பி ராஜா எத்தனையோ கோடி சொத்து சேர்த்துவிட்டார் என்று சைபர், சைபர், சைபர் என்று ஒரு ஐந்து ஆறு சைபர்களை போட்டு, இவ்வளவு சொத்து சேர்த்தார்கள் என்று சொன்னார்கள். இப்போது பார்த்தால் ஒவ்வொரு சைபராக நழுவுகிறது, ஒவ்வொரு சைபராக மறைகிறது. கடைசியில் பார்த்தால் எந்தக் குற்றமும் ராஜா மீது இல்லை. யார் மீதும் இல்லை என்று சொல்லுகின்ற அளவிற்கு அவர்கள் தங்களுடைய வார்த்தைகளிலிருந்து பின்வாங்கி கொண்டிருக்கிறார்கள். எந்த இலாக்காவும் எதையும் கண்டுபிடித்ததாக சொல்ல முடியவில்லை. தம்பி ராஜாவே கேட்டார், இதுவரையிலே என் மீது என்ன குற்றம் சுமத்தினீர்கள்? என்ன குற்றத்தை நிரூபித்தீர்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம் என்று. காங்கிரசார் திராவிட முன்னேற்றக் கழகத்தை பழிவாங்குகின்ற வகையிலேதான் நடந்து கொண்டார்களே அல்லாமல், யாரை பழிவாங்கலாம்,
யாரை பழிவாங்கலாம் என்றுதான் அலைந்தார்களே தவிர தங்கள் ஆட்சியை காப்பாற்றிக் கொள்ள என்ன தவறு செய்யலாம் என்று எண்ணினார்களே தவிர எங்களையெல்லாம், நன்றி மறந்து, நன்றி என்றால் என்னவென்றே தெரியாத ஒரு சூழ்நிலையிலே வாழ்ந்தவர்கள் காங்கிரஸ் கட்சியினுடைய பல நண்பர்கள்.
அதனால்தான் இன்றைக்கு தமிழகத்திலும் சரி, வேறு மாநிலத்திலேயும் சரி காங்கிரஸ் கட்சியினுடைய நிலைமை இந்த அளவிற்கு தாழ்ந்திருக்கிறது என்றால், காந்தியடிகள் தலைமையிலே இருந்த காங்கிரஸ் கட்சி, ஆசியாவின் ஜோதி பண்டித ஜவகர்லால் நேரு தலைமையிலே இருந்த காங்கிரஸ் கட்சி இன்றைக்கு அதல பாதாளத்திலே விழுந்து கிடக்கிறது என்றால் அதற்கு என்ன காரணம்? ஒரு மனிதனுக்கு அவன் நல்லமுறையிலே வாழ வேண்டுமேயானால் நன்றியுணர்வு இருக்க வேண்டும். அந்த நன்றி உணர்வு இல்லாமல் கடந்த காலத்திலே தங்களை கைதூக்கி விட்டவர்கள் யார் என்பதையெல்லாம் எண்ணி பார்க்காமல் திராவிட முன்னேற்றக் கழகத்தையும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தோழர்களையும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய செயல்வீரர்களையும் அவர்கள் படுத்தியபாட்டிற்கு அனுபவிக்கிறார்கள். என்னதான் அனுபவித்தாலும் அவர்களுக்கு ஒன்று சொல்லுவேன்,
இன்னமும் சொல்லுவேன், நம்பிக்கையோடு சொல்லுவேன், இதே காங்கிரஸ்காரர்கள் நாளைக்கு மனம் வருந்தி நாங்கள் இந்த மதச்சார்பற்ற நிலைக்கு மீண்டும் திரும்புவோம், நாங்கள் மத வெறியர்களை ஆதரிக்க மாட்டோம் என்று சொல்வார்களேயானால்; என்று முன் வருவார்களேயானால்; அவர்களுக்கு போனால் போகிறது என்று திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களை ஆதரிக்கும். எதற்கு? ஆதரித்து ஓட்டு போட அல்ல. அவர்களுக்கு வந்த தீங்குகளை மாற்றி அமைக்க, அவர்களுக்கு வந்த தீமைகளை உடைத்து நொறுக்க, அவர்களை மன்னித்து, அவர்களை பொறுத்துக்கொண்டு இதுவரையிலே அவர்கள் செய்த காரியங்களையெல்லாம் எண்ணிப்பாராமல்; அவர்களுக்கு பொது மன்னிப்பு தருவது என்ற முறையிலேதான்...