ஜெ., சொன்னால் எம்.பி.பதவியை ராஜினாமா செய்ய தயார் - சசிகலா புஷ்பா
தூத்துக்குடி: தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டால் எம்.பி., பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன் என்று அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா கூறியுள்ளார்.
சென்னையில் என்கவுண்டரில் கொல்லப்பட்ட வெங்கடேஷ் பண்ணையாரின் 13வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக தூத்துக்குடிக்கு வந்திருந்தார் சசிகலா புஷ்பா. பின்னர் திருச்செந்தூர் அருகே உள்ள அவரது நினைவிடத்தில் சசிகலா புஷ்பா அஞ்சலி செலுத்தினார். அவரைக் கைது செய்ய போலீஸாரும் திட்டமிட்டுக் காத்திருந்தனர். ஆனால் உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை உத்தரவு போட்டதால் போலீசார் அவரை கைது செய்யும் நடவடிக்கையை கைவிட்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா புஷ்பா, முதலமைச்சர் கேட்டுக்கொண்டால் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கொடுத்துவிடலாம். அவர்களுக்கு பின்னால் இருக்கும் இன்னொரு கும்பலுக்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது.
முதலமைச்சர் வயதில் பெரியவர்கள் அதனால் எங்களுக்கு மரியாதை இருக்கிறது. ஆனால் பின்னால் இருந்து ஆட்டி வைப்பவர்களை முதலமைச்சர் தெரிந்து அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். அவர்கள் குடும்பத்தினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.