சென்னையை மூழ்க வைத்த அடையாறு... ஆக்கிரமிப்புகள் முக்கிய காரணம்!
சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட அதிகளவு நீரானது தங்குதடையின்றி கடலைச் சென்றடையாமல், சென்னைக்குள் வெள்ளமாக மாறியதற்கு நகரின் நிலப்பகுதி ஏற்ற இறக்கமாக இருப்பதே முக்கிய காரணமாகக் கருதப் படுகிறது.
கடந்த வாரம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே வெள்ளக் காடாக மாறிப் போனது. குடியிருப்புகளுக்குள் நீர் புகுந்ததால், படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். வீட்டில் இருந்த வீட்டு உபயோகப் பொருட்கள், முக்கிய ஆவணங்கள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் வெள்ள நீரில் ஊறி வீணாகின.
மக்களின் இயல்பு வாழ்க்கையையே புரட்டிப் போட்டது இந்த வெள்ளம். இந்தளவிற்கு சென்னை அழிவைச் சந்திக்க காரணம் செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து திறந்துவிடப்பட்ட அதிகப்படியான நீர் தான் எனக் குற்றம் சாட்டப்படுகிறது.

இப்படித் தான் நடக்கவேண்டும்...
அவ்வாறு வெளியேற்றப்பட்ட அதிகப்படியான நீர் அடையாறு ஆற்றின் வழியாக முறைப்படி பயணம் செய்து கடலைச் சென்றடைந்திருந்தால் இந்தளவிற்கு நகரில் வெள்ளம் தேங்கியிருக்காது. ஆனால், அவ்வாறு நிகழவில்லை.

செம்பரம்பாக்கம் ஏரி...
அதற்குக் காரணம் அடையாறு ஆற்றின் படுகை, கடலை நோக்கி படிப்படியாக இறங்கிச் செல்லாமல், இடைப்பட்ட இடங்களில் மேடான பகுதிகள் அமைந்திருப்பது தான். அடையாறு ஆற்றின் தோற்றுவாய் செம்பரம்பாக்கம் ஏரி தான். கடல் மட்டத்தில் இருந்து 62 அடி உயரத்தில் உள்ளது இந்த ஏரி.

கடல் மட்டத்திலிருந்து...
சென்னையின் பெருவாரியான பகுதிகள் கடல்மட்டத்திலிருந்து சுமார் 25 முதல் 35 அடி வரையிலான உயரத்தில் இருக்கின்றன. திருவல்லிக்கேணி 30 அடி உயரத்திலும், சென்ட்ரல் ரயில் நிலையம் 18 அடி உயரத்திலும், புரசைவாக்கம் 23 அடி உயரத்திலும் இருக்கின்றன.

கண்ணகி நகர்...
இதேபோல், வேளச்சேரியிலுள்ள ஏரிக்குத் தெற்குப் பகுதி கடல்மட்டத்திலிருந்து வெறும் 14 அடி உயரமே இருக்கிறது. கொட்டிவாக்கத்திலுள்ள கண்ணகி நகர் கடல்மட்டத்திலேயே ( 0 அடி) இருக்கிறது.

அடையாற்றில் வெள்ளம்...
இந்த நில அமைப்பில், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்படுகின்ற நீரானது அடையாற்றில் பயணம் செய்ய வேண்டும். ஆற்றின் வழி சிறிதாக இருந்தாலும், தொடர்ச்சியாக இருந்தால் மட்டுமே இந்த நீரானது முறைப்படி கடலைச் சென்று அடையும்.

சீரற்ற பயணம்...
ஆனால், செம்பரம்பாக்கத்திலிருந்து வெளியேறும் நீரானது குரோம்பேட்டைக்கு மேற்கே சென்னை வெளிவட்டச் சாலையை அடைகையில், நிலமட்டம் கடல் மட்டத்திலிருந்து 35 அடி என்னும் அளவுக்குத் தாழ்ந்து வந்துவிடுகிறது.

விமான நிலையப் பகுதி...
அதனைத் தொடர்ந்து மீனம்பாக்கம் விமான நிலைய ஓடுபாதையை ஒட்டிய அடையாற்றுப் படுகை கடல் மட்டத்திலிருந்து வெறும் 12 அடி என்ற தாழ்நிலையை அடைந்து விடுகிறது. அங்கிருந்து கடலைச் சேரும்வரை அடையாறு தொடர்ச்சியாகச் சரிந்து இறங்குவதில்லை.

ஏற்றத்தாழ்வுகள்...
அடுத்தடுத்து வரும் அடையாற்றின் படுகைகள் 10 முதல் 20 அடிவரை உயர்வதும் பின்பு சரிவதுமாகவே இருக்கிறது. இதனால், தங்கு தடையின்றி செல்ல வேண்டிய வெள்ள நீர், பல இடங்களில் தேங்குகிறது. பின்னர் அப்பகுதிகளை நிறைத்த பின்னரே அடுத்த இடத்திற்கு நகர்கிறது.

ஊருக்குள் புகுந்தது...
இத்தகைய ஆற்றுப் படுகையால் தான் திடீரென்று ஏற்பட்ட மிகுவெள்ளம் வலுவில்லாத கரைப்பகுதியை மீறி, ஊருக்குள் புகுந்துவிட்டது. ஏற்கனவே ஏற்றத்தாழ்வான ஆற்றுப்படுகை உள்ள நிலையில், நீர் பாய வேண்டிய இடங்களில் ஆக்கிரமிப்புகளும், அடைப்புகளும் அதிகமாக விட்டது.

பெரும் பாதிப்பு....
இதனால் தண்ணீர் போக்கு மேலும் தடைபட்டது. எனவே பள்ளமான பகுதிகளில் தேங்கிய நீரானது நிரம்பி வழிய மேலும் காலம் எடுத்துக் கொண்டது. இதனாலேயே சென்னை நகர் அடையாற்று வெள்ளத்தால் இந்த பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளது.












Click it and Unblock the Notifications